இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள தனக்கு சொந்தமான பெரிய வீட்டை விற்று விட்டு திருவனந்தபுரம் சென்றார் ஸ்ரீவித்யா. சென்னையிலுள்ள அவரது பிளாட் மட்டும் இன்னும் அவர் பெயரிலேயே இருக்கிறது.
திருவனந்தபுரம் சென்ற பிறகு மலையாள தனியார் தொலைக்காட்சி ஒன்றின் 'அம்மா தம்புராட்டி' சீரியலில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் ஐம்பதாவது எபிசோடை நெருங்கும் முன் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, சீரியல் ட்ராப்பானது.
எர்ணாகுளம் மாதா அமிர்தானந்த மயி மருத்துவமனையில் ஸ்ரீவித்யா முதலில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவர் தனக்கு நெருங்கியவர்களிடமும் தொடர்பு கொள்ளாமல் தனிமையில் இருந்ததால் ஸ்ரீவித்யாவுக்கு என்ன வியாதி என்பதே தெரியாமல் இருந்தது.
தற்போது திருவனந்தபுரம் உத்திரம் திருநாள் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அவரை சந்திக்கச் சென்ற கமலிடம் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் ஸ்ரீவித்யா. அவரை சந்தித்த கமல், "ஒருவரின் நோயை பற்றி வெளியே சொல்வது அநாகரிகம்" என்று தெரிவித்துவிட்டதால், ஸ்ரீவித்யாவின் நோய் குறித்த ரகசியம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
அவர் பூரண நலம்பெற வேண்டும் என்று பிரார்த்திப்பதை தவிர இப்போது நாம் செய்யக்கூடியது எதுவுமில்லை!