'ஆணை' விழாவில் அழுத தயாரிப்பாளர் / படங்களுடன்
01.09.2005
By: Amalan
'ஆணை' இசை வெளியீட்டு விழாவில் அதன் தயாரிப்பாளரின் கண்கள் திடீர் சிரபுஞ்சியாய் மாறி கண்ணீர் மழை பொழியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
|
வரவேற்புரையில் வாய்நிறைய சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார் என்று நினைத்தால் மனசுக்குள் அழுத்திக்கொண்டிருந்த சோகத்தை கரகர குரலில் கொட்டிதீர்த்துவிட்டார் தயாரிப்பாளர் சீனிவாசன். படத்திற்கு பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டு சிக்கலில் சிக்கி தவித்ததுதான் இதற்கு காரணமாம்.
"பல பிரச்சனையில் மாட்டிக்கொண்டு படத்தை தொடர்ந்து எடுக்கமுடியாமல் இருந்த நேரத்தில் எனக்கு சிலர் உதவினார்கள். அவர்களையெல்லாம் இன்று என் தெய்வங்களாக நினைத்துக்கொள்கிறேன். இதில் முக்கியமானவர் அர்ஜூன்" என்ற சீனிவாசன் கண்ணீரால் நன்றிகளை காணிக்கையாக்கியபோது மனசே கனத்துவிட்டது.
'ஆணை'யில் இவ்வளவு அவதிக்குள்ளான இந்த சீனிவாசன் யார் தெரியுமா? ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரை வைத்து படங்களை தயாரித்த மணி அய்யரின் மகன்தான். இவரது இன்னொரு மகன் கேமராமேன் ஷிவா. 'ஆணை'க்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சரி விழாவிற்கு வருவோம்...
ஏவிஎம். ஏசி தியேட்டரில் நடந்த நிகழ்ச்சியில் முதல் கேசட்டை சத்யராஜ் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தியாகராஜன் பெற்றுக்கொண்டார். இதில் கவிஞர் வாலி, இப்ராஹிம் ராவுத்தர், சிபிராஜ், படத்தின இயக்குனர் செல்வா, இசையமைப்பாளர் டி. இமான், நாயகிகள் நமிதா, கீர்த்தி சாவ்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நாயகன் அர்ஜூன் விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு உதவி செய்த அவரை விஐபிகள் தங்கள் வாழ்த்துரையில் பாராட்டி தள்ளினார்கள்.
"தயாரிப்பாளர் யாருக்காவது பிரச்சனை வந்தால் சங்கத்திற்கு முதல் ஆளாக ஓடி வருபவர் சீனிவாசன்தான். அப்படிப்பட்ட நல்ல மனிதன் இன்று கண்ணீர் விட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவரது நல்ல மனசுக்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்" என்று வந்திருந்தவர்கள் மனசார வாழ்த்தினர்.
"அர்ஜூன் சத்யராஜைவிட உயரம் குறைவாக இருந்தாலும், தயாரிப்பாளரின் கண்ணீரை துடைக்க கைகொடுத்ததால், உள்ளத்தில் உயர்ந்த மனிதராகிவிட்டார். எவன் ஒருவன் சிந்தும் வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்" என்ற வாலியின் பேச்சில் வழக்கம்போலவே கவிதை.
"ஒரு படம் ஸ்கிரிப்ட் நன்றாக இருந்தால்தான் ஓடும். 'பாபா' ஸ்கிரிப்ட் நன்றாக இல்லாததால் அது ஓடவில்லை. 'சந்திரமுகி' ஸ்கிரிப்ட் நன்றாக இருந்ததால் படம் ஓடுகிறது. ரஜினி படத்திற்கே இந்த நிலைமை இருக்கும்போது, எல்லா இயக்குனர்களும் ஸ்கிரிப்டில் கவனம் செலுத்தவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போதே ஸ்கிரிப்ட் நன்றாக இருக்கும் என்று நம்ப முடிகிறது. இந்தப்படம் நூறாவது நாள் காணவேண்டும்" என வாழ்த்தினார் சத்யராஜ்.
விழா நடந்த அரங்கில் ஏசியின் டெம்ப்ரேச்சர் அதிகமாக இருந்தாலும் சூட்டை கிளப்பியது என்னவோ நமிதாதான். முட்டிவரை முடிந்துபோன ப்ராக் அணிந்துவந்த கண்கொள்ளா காட்சியை காமிராக்கள் சுட்டுத்தள்ளின.
|