தலைவர் பதவி்க்கு இயக்குனர் ஆர்.சி.சக்தி மனு தாக்கல் செய்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட இயக்குனர்கள் சிலர், பாரதி ராஜாவைத் தலைவராக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொள்ளுமாறு சக்தியை சிலர் வற்புறுத்தி வருகின்றனர். மனு வாபஸ்பெற இன்று கடைசி நாள். இதனால், மனுவை வாபஸ் பெறுமாறு சக்தியை நேரிலும், போனிலும் சிலர் நிர்பந்தித்து வருகிறார்கள்.
இது குறித்து தினகரன் நிருபரிடம் ஆர்.சி.சக்தி கூறியாதாவது:-
"இயக்குனர்கள் சங்கத்துக்கு ஏற்கெனவே மூன்று முறை தலைவராக இருந்தேன். எனக்குப் பிறகு பாலசந்தர், பாரதிராஜா தலைவர்களாக இருந்தனர். கடைசியாக சந்திரசேகரன் தேர்வானார். ஏற்கனவே தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்தேன். "நமக்குள் போட்டி வேண்டாம். ஒற்றுமையாக ஒருவரைத் தேர்வு செய்யலாம்" எனக் கூறி, பாலசந்தரை ஒரு முறையும் பாரதிராஜாவை ஒரு முறையும் தேர்வு செய்தனர். இந்த முறையும் அதையே செய்யச் சொல்கிறார்கள். இதற்கு காரணம், ஈகோதான்.
எனக்கு யார் மீதும் பொறாமை இல்லை. ஏற்கெனவே சந்தித்த கெட்ட அனுபவங்களால் தான் இந்த முறை தேர்தலில் நிற்கிறேன். இப்போது தேர்தலில் இருந்து விலகமாட்டேன். போட்டியில் இருந்து விலகுமாறு தொடர்ந்து என்னை வற்புறுத்தி வருகிறார்கள். இது ஜனநாயக நாடு. தேர்தலில் நிற்கக் கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அவர்களில் சிலர், வசதிபடைத்தவர்கள். எது வேண்டுமானாலும் செய்யலாம். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. களத்தில் குதித்துவிட்டேன். இனி பிரச்னைகளை சமாளிப்பேன்".
இவ்வாறு சக்தி கூறினார்.
|