Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
கம்பனிடம் கற்ற பாடம் : கமல் ருசிகர பதில்
- 02.05.2009
By Amalan
ரசிகர்களுக்கான அடுத்த விருந்தாக கமல் பரிமாறப்போகும் படம் 'உன்னைப்போல் ஒருவன்'. இந்தியில் வெளியான 'எ வெட்னஸ்டே' படத்தின் ரீ-மேக் இது. தமிழ், தெலுங்கில் தயாராகும் இதில் கமல், மோகன்லால், வெங்கடேஷ் நடிக்கின்றனர்.
இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் ஆகஸ்ட் மாதமே படத்தை வெளியிடும் யோசனை உள்ளதாம். காரணம் வரும் ஆகஸ்ட் 12 ந் தேதியுடன் 'களத்தூர் கண்ணம்மா' வெளிவந்து 50 வருடமாகிவிட்டதாம். எனவே பொன்விழா தினத்தில் படம் வெளியாவதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனராம்.
நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மோகன்லால், மகள் ஸ்ருதியுடன் வந்திருந்த கமல், இப்படம்மூலம் தனது மகள் ஸ்ருதி இசையமைப்பாளராக அறிமுகமாகும் தகவலை வெளியிட்டார். 'சலங்கை ஒலி' படத்தில் தப்பு தப்பாக போட்டோ எடுக்கும் குட்டி பையனாக நடித்த சக்ரி டொலேடி இப்படத்தை இயக்குவதாக தெரிவித்த கமல், "ஆனால் இம்முறை படத்தை சரியாக எடுத்துவருவதாக" கமெண்ட் அடிக்க, இயக்குனரின் முகத்தில் வெட்கம்.
இந்தியாவிலேயே முதல்முறையாக ரெட் கேமிராவில் உருவாகும் முதல் படம் இதுதான் என்ற கமல், காட்சி எடுத்து முடித்ததுமே உடனுக்குடன் எடிட் செய்வதாக கூறினார். இலக்கிய உலகில் பரிட்சயமான கவிஞர் மனுஷ்ய புத்திரனை பாடலாசிரியராகவும், எழுத்தாளர் இரா.முருகனை வசனகர்த்தாவாகவும் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார்.
படத்தின் கலைஞர்களை அறிமுகப்படுத்தி முடித்ததும் கேள்விகளுக்கு செவி கொடுத்த கமல், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி கேட்டபோது "எல்லோரையும் போலவே இலங்கையில் அமைதி ஏற்படவேண்டும் என்பதுதான் எனது கருத்தும். ஈழத்தமிழரின் வாழ்க்கையை படமாக்கும் ஆசை இருக்கு. ஆனால் தைரியம்தான் இல்லை" என்றவரை நோக்கி அடுத்து வந்த குதர்க்க கேள்வி எரிச்சலூட்டவே, அதனை அரசியல்வாதியிடம் கேளுங்கள் என டிராக் மாற்றினார்.
ரீ-மேக் பண்ணும் எண்ணம் வந்தது ஏன் என கேட்டபோது, "இது கம்பனிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம். வால்மீகி எழுதிய இராமாயணத்தையே ரீ-மேக் செய்தவன்தானே கம்பன்" என்றவர், இந்தி படத்தை அப்படியே எடுக்காமல் தமிழுக்கு தகுந்தவாறு சில மாற்றங்களை செய்துள்ளதாக கூறினார்.
|