என்ன நடந்தது இவர்களுக்குள் என்பது பலருக்கு தெரியாது. தன் மனசுக்குள் பதுக்கி வைத்திருந்த அந்த உண்மைகளை இப்போது வெளியிட்டுள்ளார் அமீர். பருத்திவீரனுக்காக அமீருக்கு சினிமா பிரஸ்கிளப் நடத்திய பாராட்டு விழாவில் அவர் பகிர்ந்துகொண்டவை......
"நானும் பாலாவும் ஒன்றாகவே திரிந்தவர்கள் சென்னை வந்து அவன் இயக்குனராகிவிட்டான். நான் அவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். எல்லோரும் சார் என்று அழைக்கும்போது நான் மட்டும் பாலா என்று அழைப்பேன். 'சேது' வெற்றிக்கு பிறகு அவனை சுற்றி ஒரு கூட்டம் கூடியது. அவர்கள் என்னிடம் பாலாவை 'பாலா சார்' என்றுதான் அழைக்க வேண்டும் என்றார்கள். அப்படியெல்லாம் என்னால் அழைக்க முடியாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டேன். அதன்பின் நானும் பேசவில்லை. அவனும் கூப்பிடவில்லை.
'பருத்திவீரன்' படம் வெளிவந்ததும் ஒரு நாள் பாலாவிடமிருந்து போன். எங்கேயிருக்கே? என்றான். நான் அலுவலகத்தில் இருப்பதாக சொன்னேன். உடனே வா என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான். நான் போனேன். முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் வா என்றான். சிறிது நேரம் கழித்து, "படம் பார்த்தேன் நானே 15 இடத்தில் அழுதுட்டேன்" என்றான், எந்த இடத்தில் என்றேன். அதெல்லாம் உங்கிட்ட சொல்லணுமா என்றவன், ஒரு வியூ ஃபைன்டரை எடுத்து என் கழுத்தில் மாட்டினான். இது பாலுமகேந்திரா அவனுக்கு பரிசாக கொடுத்தது. இதை என் கழுத்தில் போட்டவன், இது என் குருநாதர் எனக்கு கொடுத்ததுடா என்றான். இப்படி உணர்ச்சிபூர்வமான ஒரு விஷயத்தை அமீர் பகிர்ந்து கொள்ள, இடை நுழைந்தார் பாலுமகேந்திரா.
"இயக்குனர்கள் பயன்படுத்தும் வியூ ஃபைண்டர் அது. சத்யஜித்ரேவின் ஒளிப்பதிவாளர் எனக்கு பரிசாக கொடுத்திருந்தார். பாலா படம் துவங்கிய நேரத்தில் அவனை ஆசிர்வாதம் செய்து இந்த வியூ ஃபைண்டரை அவனுக்கு பரிசாக கொடுத்தேன். அது இப்போது அமீரிடம் வந்துவிட்டது. வர வேண்டிய இடத்திற்குதான் வந்திருக்கிறது வாழ்த்துக்கள் என்றார். அதே நேரத்தில் அமீருக்கு ஒரு வேண்டுகோளும் வைத்தார். அமீர் நடித்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன். அரிதாரத்திற்குள் அவர் தொலைந்து போய்விடக் கூடாது. அவர் எப்போதும் இயக்குனர் அமீராகதான் இருக்க வேண்டும்" என்றார்.
|