'சந்திரமுகி' வெற்றிவிழா - சூப்பர் படங்களுடன் லைவ் ரிப்போர்ட்
03.10.2005
By: Amalan
இரண்டாம் சிவாஜியாகிவிட்டார் ரஜினி. 'கமலா அம்மாவின் அனுமதியுடன் சொல்கிறேன்; எங்களின் அடுத்த சிவாஜி இனி ரஜினிதான்' என ராம்குமார் உணர்ச்சிவசப்பட்டபோது மொத்த கூட்டமும் ஆர்ப்பரிக்க, சூப்பர் ஸ்டாரின் முகத்தில் இன்ப அதிர்ச்சி.
|
ரஜினிக்கு இந்த பாக்கியம் கிடைத்தது நடிகர் திலகத்தின் பிறந்தநாளில் கொண்டாடப்பட்ட 'சந்திரமுகி' விழாவில்தான். படத்தின் 200-வது நாள் வெற்றி விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நடந்தது.
இடப்புறம் ரஜினியும் - சிவாஜியும் தலை ஒட்டி சிரித்துக்கொண்டிருக்கும் பேனர், வலப்புறம் தனது தாயுடன் சிவாஜி சாமி கும்பிடும் பேனர், நடுவில் சந்திரமுகி படத்தில் வரும் அரண்மனை கதவு செட் என தோட்டாதரணியின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமாக காட்சியளித்தது மேடை.
சரியா 5.30 மணிக்கு என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்தபடியே அமர்க்களமாக ஆரம்பமானது விழா. கலா நடனக்குழுவினர் ரஜினி பட பாடல்களுக்கு நடனமாட, முன் வரிசையில் இருந்த சூப்பர்ஸ்டார் கண்டு ரசித்தார் - சிரித்தார்.
'சந்திரமுகி'யில் ரஜினி லகலகலக சொல்லும் காட்சி திரையில் ஒளிபரப்பப்பட்டபோது லதாரஜினி, சௌந்தர்யா, ஐஸ்வர்யா-தனுஷ் என குடும்பமே ரசிகர்களோடு ரசிகர்களாக கைத்தட்டி மகிழ்ந்தது.
பின்னர் விஐபிகள் மேடை ஏறியதும் சிறப்பு விருந்தினராக வந்திருந்த மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவுக்கு பலபேர் தூக்கி சுமக்கும் அளவிலான நினைவுப்பரிசு ஒன்று வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிவாஜிகணேசன் நினைவு பரிசு வழங்க பின்னணி பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் மேடைக்கு அழைக்கப்பட்டபோது பாடகரை கட்டி அணைத்து மகிழ்ந்தார் ரஜினி. இதனை சற்றும் எதிர்பாராத சௌந்தர்ராஜன் கைகளை உயரே விரித்து காட்டி இறைவனை நினைவுக்கொண்டார்.
பின்னர் 'சந்திரமுகி'யில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு கேடயம் வழங்க அமைச்சரும், ரஜினியும் தயாராக முதலில் வாசிக்கப்பட்ட பெயர் சௌந்தர்யாரஜினிதான். 'சந்திரமுகி' டைட்டிலை வடிவமைத்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
'தேவுடா' பாடலில் மூன்றாவதாக ரிப்பீட்டு சொன்ன காஜா பகதூருக்கு கேடயம் வழங்க அழைக்கப்பட்டபோது மேடைக்கு வந்த அவரை கட்டியணைத்து அமைச்சரிடம் அறிமுகப்படுத்தினார் ரஜினி. காரணம் ரஜினி நடத்துனராக இருந்தபோது அதே பேருந்தில் ஓட்டுநராக இருந்தவர்தான் ராஜா பகதூர்.
நயன்தாரா, வடிவேலு, விஜயகுமார் என பலரும் கேடயம் வாங்கி அமர்ந்ததும் படத்தின் இயக்குனர் பி. வாசுவுக்கு நடிகர் திலகம் உருவம் பொறித்த தங்கசங்கிலி ஒன்றை இளைய திலகம் அணிவிக்க ஆனந்த கண்ணீரில் மூழ்கினார் வாசு.
தான் ஷீல்டு வாங்கியபோது மேடையில் இருந்த சக கலைஞர்களை கட்டி அணைத்து மகிழ்ச்சியை பிரபு பரிமாறிக்கொண்டார். அப்போது நயன்தாராவிடம் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்று மொத்த ஆடியன்ஸின் கண்களும் அலைபாய, ஓரவஞ்சனை காட்டாமல் நயனையும் அணைத்துக்கொண்டார் பிரபு. அப்போது அரங்கத்தில் எழுந்த விசில் சப்தங்கள் பிரபுவின் காதில் விழுந்திருக்கமோ என தெரியவில்லை.
கடைசியாக கேடயம் வாங்கிய சூப்பர் ஸ்டார் ஸ்பெஷலாக கவனிக்கப்பட்டார். முழுக்க முழுக்க பட்டால் செய்யப்பட்டு அவரது உருவம் வரையப்பட்டிருந்த பொன்னாடையை ராம்குமாரும் பிரபுவும் இணைந்து கொடுக்க அதனை அவருக்கு அணிவித்தார் அமைச்சர். குதிரையில் வீர சிவாஜி இருப்பது போன்ற வெள்ளி நினைவு பரிசு ஒன்றும் ரஜினிக்கு வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் தாசரி நாராயணராவ் விஜய், ஷங்கர், விஜயகுமார், வடிவேலு, பிரபு, வாசு அனைவரும் ரஜினிக்கு புகழ் மாலை சூட்ட இறுதியாக பேச, ரஜினி எழுந்தபோது கரகோஷம் அரங்கத்தை சப்தஸ்வரமாக்கியது.
நடிகர்கள் அரசியல் பேசியும், அரசியல் பிரவேசமும் செய்துகொண்டு வரும் இந்த காலக்கட்டத்தில் ரஜினியின் ஆன்மிகபேச்சு சற்றே வித்தியாசமாகத்தான் இருந்தது.
சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பேச்சின் சுருக்கம் இதுதான்....
" 'சந்திரமுகி' தொடக்கவிழாவில் நான் யானை இல்ல குதிரை. விழுந்தால் எழுந்துடுவேன் என்று சொன்னேன். அதுபோலவே நான் எழுந்து நின்னேன். ஆனால் ஓட வச்சது நீங்கள்தான் (ரசிகர்களை நோக்கி கையை காட்டுகிறார்).
இன்னொரு காரணம் பாபாஜி. அவரோட சக்திதான் 'சந்திரமுகி'யை வெற்றிமுகமாக்கியது. இன்பமும் துன்பமும் கலந்து வந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். அதற்காக துன்பத்தை தேடி நாம போகவேண்டாம். துன்பம் நம்மை தேடி வந்தாலும் நொந்து போகவேண்டாம். பாபாஜியின் அருளால் 'சந்திரமுகி' வெற்றி பெறும் என்று முன்பே எனக்கு தெரியும். அதனால் படம் வெளிவந்த முதல் நாள் அன்றே எனது நண்பரின் வீட்டில் 'சந்திரமுகி'யின் வெற்றிவிழாவை கொண்டாடிவிட்டேன்!" என்ற சொன்னபோது ஷாக்.
'சந்திரமுகி' விழா செய்தியில் சந்திரமுகி பற்றி ஏதும் இல்லையே என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்தவர்களுக்கு...
'ஜோ'வின் அம்மா உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவசரமாக மும்பை பறந்து விட்டாராம் ஜோதிகா. அதான் அவரது ஆஃப்செண்ட்டுக்கு காரணம்.
|