நான்கு மாதத்திற்கு ஒரு படம் இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் தனது ரிதத்திற்கு திரும்பியிருக்கிறார்.
சொந்தமாக கதை செய்கிறேன் என மண்டையை உடைத்துக் கொள்ளும் பழக்கம் இவருக்கு இல்லை. அதனால், 'தசாவதாரம்' ஷூட்டிங்கில் இருக்கும்போதே, அடுத்து சரத்குமாரை வைத்து இயக்கும் 'ஜக்குபாய்' கதை விவாதத்தை தொடங்கினார் கே.எஸ்.ஆர். சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
இதனையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இவர் இயக்கயிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக நயன்தாரா நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல்படம் இது. கஜினியில் நயன்தாரா சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில்தான் சூர்யா ஜோடியாக முதன்முறையாக நடிக்கிறார்.
குருவி படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கே.எஸ்.ஆர், சூர்யா இணையும் படத்தை தயாரிக்கிறதாம்.
கே.எஸ்.ரவிக்குமார் விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் ஒன்றையும் இயக்குகிறார்.
|