'தசாவதாரம்' படத்தில் சைவ, வைணவ மோதல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ராமானுஜராக நடிக்கும் கமலை ஸ்ரீரங்கநாதர் சிலையுடன் பிணைத்து கடலில் வீசும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இப்படியொரு சம்பவம் பதினொன்றாம் நூற்றாண்டில் நடக்கவேயில்லை, இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என சாமி கோவிந்தா ராமானுஜ தாசர் நீதிமன்ற்ததில் வழக்கு தொடர்ந்துள்ளார். சர்வதேச வைஷ்ணவ தர்மா சம்ரக்ஷ்ணா சங்கத்தின் தலைவரான இவர், தனது புகார் மனுவில் 'தசாவதாரம்' டிரையிலரில் இடம்பெற்றுள்ள வேறுசில காட்சிகளையும் குறிப்பிட்டுள்ளார்.
'ஓம்' இந்துக்களின் ப்ரணவ மந்திரம், அதில் கமல்ஹாசன் கால் வைத்திருப்பது போலவும், புனித நூலான 'கீதை' மீது ஏறி நிற்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம சாட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய காட்சிகளுடன் தசாவதாரத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஆஸ்கார் பிலிம்ஸ் மற்றும் தணிக்கைக் குழு ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
|