இளையராஜா இசையில் ஹங்கேரி கலைஞர்கள் - படங்களுடன் செய்தி
07.10.2005
By: Amalan
ஓய்ந்து போய்விட்டார் என்று நினைத்திருந்த வேளையில் ஒவ்வொரு புதுமையாக செய்ய ஆரம்பித்துவிட்டார் இசைஞானி.
|
சிம்பொனி, திருவாசகம், மூன்று ஸ்வரங்களில் மெட்டமைத்த பாடல் என இசை ப்ரியர்களுக்கு சங்கீத சாப்பாடு கொடுத்து வரும் இளையராஜா லேட்டஸ்டாக ஒரு விருந்து கொடுக்கவுள்ளார்.
நான்கு மொழிகளில் தயாராகும் 'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' என்ற படத்திற்கு ஹங்கேரியிலிருந்து இசைக் கலைஞர்களை வரவழைத்து வித்தியாசமான பின்னணி இசையை அமைத்துள்ளார்.
சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் இதற்கான பணி நேற்று நடந்தது. இரு தடுப்பு கண்ணாடி கதவுகளை கடந்து உள்ளே போனோம்.
வெள்ளை வேட்டி - ஜிப்பாவில், நோட்ஸ் பேடை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார் ராஜா. அவருக்கு முன்பாக இசைக்கருவிகளுடன் தயாராக இருந்தனர் ஹங்கேரி கலைஞர்கள்.
'ஓ.கே. டேக் போகலாம்....' என்றபடி கைகளை விரித்து இசைஞானி சைகை செய்ய, அவரது விரல் அசைவுகளுக்கு ஏற்றவாறு சுதி மீட்டதொடங்கினர் ஹங்கேரி கலைஞர்கள்.
கம்போஸிங் முடிந்ததும் நிருபர்களை சந்தித்த இளையராஜா படம் பற்றி கூறியதாவது:-
"அரவாணியாக மாறும் ஒரு சின்ன பையனை அதிலிருந்து மீட்பதுதான் படத்தின் கதை. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு வித்தியாசமான பின்னணி இசை தேவைப்பட்டது. இதற்காக சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து இசையமைக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதற்கு காலம் போதாததால் ஹங்கேரி இசைக்கலைஞர்களை வரவழைத்து இசையமைத்துள்ளேன்.
2 மணிநேரம் வரும் பின்னணி இசைக்காக மொத்தம் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஹங்கேரி கலைஞர்கள் எளிதாக புரிந்துக்கொண்டு வேகமாக செயல்பட்டதால் இரண்டே நாளில் இசைப்பதிவு முடிந்துவிட்டது.
புல்லாங்குழல், கிளாரிநெட், பேஸ் கிளாரி நெட் உள்ளிட்ட இசைக்கருவிகளை ஐந்து இசைக்கலைஞர்கள் வாசித்துள்ளனர்" என்ற ராஜாவின் முகத்தில் வேலை முடிந்த திருப்தி.
குழந்தைகளும் பார்த்து மகிழும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் டிசம்பர் மாதம் 2-ந் தேதி இந்தியா முழுவதும் வெளிவரவுள்ளது என்ற தகவலை தயாரிப்பாளர் பர்கீஸ் கூறினார்.
|