தமிழின் அரிய முயற்சியாக, அவசர காலத்தின் அத்தியாவசியமாக இந்த கதையை தயாரித்து இயக்குகிறார் அழகப்பன் சி. கமலிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர். இலக்கிய வாசனையும் கொண்டவர்.
"இந்த இயந்திர உலகத்தில் புத்தக பொதி சுமப்பதும், பெற்றோரின் கணக்கிடலில் கட்டுப்பட்டு கிடப்பதுமாக குழந்தைகளுக்கான உலகம் எவர் கண்களுக்கும் தென்படாத சோகம் நிலவிவருகிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது முயற்சி."
பிள்ளைகளுக்கு பெற்றோராக வாழும் அனுபவம் என்பது எல்லா அனுபவங்களையும் பின்னுக்கு தள்ளிவிடும் அற்புதமான உணர்வு. ஆனால் அந்த அனுபவத்தை இன்றைய பெற்றோர்கள் பலரும் பெறுவதில்லை. நீண்ட காலமாக என் மனசுக்குள் உறுத்திக்கொண்டிருந்த வேட்கைக்கு வண்ணத்துப்பூச்சி மூலம் உருவம் கொடுத்திருக்கிறேன்.
தன்னை இயந்திரமாக மாற்றிய நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்ட சிறுமி, தாத்தாவை சந்திக்க கிராமத்துக்கு செல்கிறாள். கலப்படமற்ற பாசம், தனக்கென விரிந்துகிடக்கும் இயற்கை என அந்த சூழல் அவளை ஈர்த்துக்கொள்ள, மீண்டும் நகரத்திற்கு வரமாட்டேன் என அடம் பிடிக்கிறாள்.
இதனால் அவளது பெற்றோர் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை. சிறுமியின் முடிவும் நீதிமன்றத்தின் முடிவும் என்னவாக இருக்கும் என்பது படத்தின் முடிவு" என அழகப்பன் கதை சொல்லும் விதத்திலும் வண்ணத்துபூச்சியின் அழகு.
சிறுமியாக நடிக்கும் திருப்பூரை சேர்ந்த ஸ்ரீலஷ்மி, நடிப்பில் 'பெரிய ஆளாக' இருக்கிறாராம். தாதா கதாபாத்திரத்தில் பார்த்து பழகிய பாலாசிங் பாசம் நிறைந்த தாத்தா கதாபாத்திரத்தில் மனதை உருகவைக்கிறாராம். நீதிபதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேவதி கதையை கேட்டதுமே சம்பளமே வேண்டாம் என சம்மதித்தாராம்.
குழந்தைகளுக்கான படமென்றாலும் கலைப்படமாகவோ, குழந்தைகள் மட்டும் பார்க்கக்கூடிய படமாகவோ, அறிவுரை சொல்லும் படமாகவோ இருக்காது. என எதிர்பார்ப்பை தூண்டும் இயக்குனர், இந்த படம் பெற்றோர்கள் மனதில் சின்ன சலசலப்பை ஏற்படுத்தும்; அதுவே படத்தின் வெற்றியாக அமையும் என்கிறார் நம்பிக்கை பொங்க.
காண்பதற்காக காத்திருக்கிறோம் நாங்களும்!
|