இப்படி ஜீவாவிற்கு நற்சான்றிதழ் கொடுப்பவர் இயக்குனர் வி.வி.கதிர். சீமானின் சிஷ்யரான இவர் இயக்கும் முதல் படம் இது.
"நான் 'பாஞ்சாலங்குறிச்சி' படத்தில் உதவி இயக்குனரா சேர்ந்து சீமான், சூர்ய பிரகாஷ் ஆகியோரிடம் வேலை செய்தேன் என்பதைவிட நிறைய கற்றுக்கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களிடம் கற்றதையும், நான் நினைத்ததையும் இணைத்து படம் பண்ணியிருக்கேன். இந்தப் படம் ரசிகர்களையும், வினியோகஸ்தர்களையும், தயாரிப்பாளரையும் சந்தோஷப்படுத்தும்னு நான் உறுதியா சொல்றேன்". என நம்பிக்கை பொங்க பேசும் கதிர், படம் குறித்து மேலும் விவரிக்கையில்...
"ஜீவா முதல் முறையாக ஆக்ஷ்ன் பண்ணியிருக்கிறார்னு சொல்றதைவிட, இன்னொரு பரிமாணமாக வெளிப்பட்டிருக்கிறார்னுதான் சொல்லனும். கோட்டைசாமி என்கிற கதாபாத்திரமாக, கிராமத்து மண்மணம் மாறாத இளைஞனாக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறாரு. சென்னையில் நடக்கிற மனித நேயமற்ற செயல்கள் மீது ஒவ்வொரு இளைஞனுக்கும் கோபம் வரும். அதை வெளிப்படு்த்த முடியாத தவிப்பும் இருக்கும். அப்படி கோபப்பட்டு எரிஞ்சு, அணைஞ்சுபோற தீக்குச்சி இல்ல இந்த கோட்டைசாமி. தப்புன்னா எவன் செஞ்சாலும் தப்புன்னு தட்டிக்கேட்கிற தீப்பந்தம்தான் இந்த கோட்டைசாமி. இவன் அன்பு செலுத்தினால் அடங்கிப் போறவன், அதிகாரம் செலுத்தினா அடக்கிட்டுப் போறவன். ஜீவா இந்தக் கதையில் வாழ்ந்திருக்காரு. ஜீவாவால இந்தக் கதை வாழ்ந்திருக்கு.
காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் பூனம் பஜ்வா, இசைப்பள்ளி ஆசிரியையா நடிச்சிருக்காங்க. இசையை எப்படி எல்லோருக்கும் பிடிக்குமோ, அதே மாதிரி பூனம் பஜ்வாவை எல்லோருக்கும் பிடிக்கும். இந்தப் படம் ரிலீஸூக்கு முன்னாடியே ஹரி சாராடோ 'சேவல்' படத்துல ஒப்பந்தமானது எனக்கு சந்தோஷம்தான். கண்டிப்பா தமிழ் நாட்டுல தனக்குனு ஒரு இடத்த தக்க வைச்சுக்குவாங்க.
ரேவதி என்கிற திருநங்கையை அறிமுகப்படுத்தியுள்ளேன். சிறந்த நடிகையைப் போல் தன்னுடைய கதாபாத்திர்ததிற்கு உயிர் கொடுத்துள்ளார்" என்றார்.
ஜீவா பேசும்போது :-
"இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பே அதிர்ச்சிகரமாக அமைந்தது. முதல்நாள் சண்டைக்காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த பெயிண்ட் தொழிற்சாலையில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. சுவர் ஏறி குதித்து உயிர் தப்பினோம். இதுமாதிரி பல சோதனைகள் வந்தது. இதுபோல இன்னும் பல சோதனைகளை இப்படத்தில் சந்தித்தோம். இதெல்லாம் ஏதோ ஒரு சாதனைக்காகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்".
|