பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்துள்ள ஜின்னா கிரியேஷன்ஸ் M.A.ஜின்னா தயாரிக்கும் இப்படத்தில் சேவலாக பரத்தும், அவரது காதல் கோழியாக பூனம் பஜ்வாவும் நடிக்கின்றனர். சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய சிம்ரன், கல்யாணத்திற்கு பிறகு நடிக்கும் படம் இது.
படத்தின் தொடக்கவிழா விஜயா கார்டனில் நேற்று நடந்தது. சினிமா பெரும்புள்ளிகள் பலர் வாழ்த்திச்செல்ல, மீடியாக்களை சந்தித்தார் இயக்குனர் ஹரி.
"சேவல் மாதிரி பொறுப்பற்ற தனத்தோடு சுற்றித்திரியும் நாயகன், ஒரு கட்டத்தில் அடைகாக்கும் கோழியாக மாறும் சூழ்நிலைதான் கதை. திருநெல்வேலிதான் கதைக்களம். டிராயர் தெரியும் அளவிற்கு தூக்கி கட்டிய கைலி, கை சுருட்டிவிட்ட சட்டை என பரத்தின் முரட்டுத்தோற்றம் ரசிகர்களை மிரட்டும். முதல்முறையாக திருநெல்வேலி ஸ்லாங்கும் பேசுகிறார்" என்ற ஹரியிடம் சிம்ரன் கேரக்டர் பற்றி கேட்டால் அதுமட்டும் ரகசியம் என சஸ்பென்ஸ் வைக்கிறார்.
"கதையை கேட்டவுடனேயே பரத் கேரக்டரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு என் கேரக்டர் இருப்பதால், நடிப்பில் அவரை முந்த வேண்டும் என்று சிம்ரனே சவால் விட்டுள்ளார். அப்படியொரு எக்ஸலண்ட் கேரக்டர் சிம்ரனுக்கு கொடுக்கபப்ட்டுள்ளது. வடிவேலு இப்படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஒரு பாடல் காட்சியிலும் ஆடுகிறார்" என்று எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார் ஹரி.
பரத்திடம் கேட்டபோது, "ஹரி சார் கமர்ஷியல் கம் ஃபாஸ்ட்டான டைரக்டர். அவரது இயக்கத்தில் நடிப்பதற்காக காத்திருக்கிறேன். நடிப்பில் என்னுடன் போட்டிபோடும் அளவிற்கு சிம்ரன் கேரக்டர் அமைந்தாலும் அவரை ஜெயிப்பதிலேயே என் குறி இருக்கும்" என கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறார்.
|