இலங்கை தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் நேற்று மாலை ஒன்றுகூடி ஆலோசித்தனர். இக்கூட்டத்தில் அனைத்து திரைப்பட சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டுக்கூட்டத்தின் முடிவுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் இராம.நாராயணன், இயக்குனர்கள் சங்கத்தலைவர் பாரதிராஜா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
“இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை கண்டித்தும், தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழ்த் திரையுலகம் சார்பில் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 18,19,20 ஆகிய மூன்று நாட்களும் படப்பிடிப்பு உட்பட அனைத்து திரையுலக பணிகளும் ரத்து செய்யப்படுகின்றன.
19-ந்தேதி ராமேஸ்வரத்தில் திரையுலகினர் ஒரேஅணியில் திரண்டு பேரணியும், போராட்டமும் நடத்தி இலங்கை அரசுக்கு தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்கவுள்ளனர். இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை திரையுலகைச் சார்ந்த அனைவரும் கறுப்பு பேட்ச் அணிவது தொடரும்.
பொதுக்கூட்டத்தில் தமிழர் பகுதியில் குண்டு வீசுவதை நிறுத்தவேண்டும். போர் நிறுத்தம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு நேரடியாக உதவவேண்டும். இந்தியா-இலங்கை கூட்டு ரோந்து திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.
|