நேற்றுமுதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள இத்தொலைக்காட்சியின் தொடக்கவிழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் ஜீ எண்டர்டெய்மெண்ட் என்டர்பிரைசஸ் நிறுவன தலைமை நிர்வாகி புனித் கோயங்கா, ஜீ குழுமத்தின் தென்னிந்திய தலைமை நிர்வாகி ஜி.ராம்பிரசாத், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூத்த துணைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான ஜீ தொலைக்காட்சி குழுமம், இன்று முதல் தமிழில் கால் பதிக்கிறது. மெகா தொடர்கள், கேம் ஷோக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய முழுமையான பொழுதுபோக்கு சேனலாக இது இருக்கும்.
இந்தியாவிலேயே முதல் தனியார் தொலைக்காட்சி சேவையை துவக்கிய பெருமை ஜீ குழுமத்திற்கு உண்டு. 1992-ம் ஆண்டு சுபாஷ் சந்திராவால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போது 30க்கும் மேற்பட்ட சேனல்களை கொண்ட நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
1998-ம் ஆண்டு அமெரிக்காவிலும் ஒளிபரப்பை தொடங்கிய ஜீ தொலைக்காட்சி நிறுவனம், இந்தியாவின் வடமாநிலங்களில் இந்தி, மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. தென்னிந்தியாவில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முத்திரை பதித்து வரும் ஜீ டிவி, தற்போது தமிழிலும் வெற்றிகரமான பயணத்தை தொடங்கியிருக்கிறது.
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், நடிகை குஷ்பு, பிரபு நேபால் உள்ளிட்ட பிரபலங்களின் மெகா தொடர்கள், விறுவிறுப்பான டாக் ஷோக்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் எதிர்பார்ப்பபகளையும் பூர்த்தி செய்யும் புத்தம் புதிய நிகழ்ச்சிகள் மற்றும் நடுநிலையான செய்திகளுடன் ஜீ, தமிழ் தொலைக்காட்சி வானில் தன் சிறகை விரிக்கிறது.
ஜீயின் பிற மொழி சானல்களில் முத்திரை நிகழ்ச்சியாக கலக்கி வரும் பிரபலமான சரிகமப இசை நிகழ்ச்சி, சங்கீத மகா யுத்தம் என்ற பெயரில் புதுமையான வடிவத்தில் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது" என்றனர்.
மற்ற சேனல்களைப்போல ஜீ நிறுவனத்திற்கும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதாம். திரைக்கு வந்த 'அரசாங்கம்', 'சில நேரங்களில்', 'காலைப்பனி', 'சுப்ரமணியபுரம்' உள்ளிட்ட பல படங்களின் உரிமையையும் ஜீ வாங்கியுள்ளதாம்.
|