ஒரு மணிநேர டெலிபிலிமான இதில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஈழத்தமிழரான டாக்டர் ஆனந்தியின் மகன் மாஸ்டர் ஆதவன்தான் முக்கிய கதாபாத்திரம். ஆதவனின் தாயாக கருத்தம்மா ராஜஸ்ரீ நடித்துள்ளார்.
படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், அமீர், தங்கர் பச்சான், சுப்ரமணிய சிவா, டாக்டர் கமலா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
அப்போது பேசிய கே.எஸ்.ரவிக்குமார், டாக்டர் ஆனந்தி பற்றிய ஒரு பிளாஷ் பேக்கை விவரித்தபோது கைக்குட்டை நனையும் அளவிற்கு பார்வையாளர்கள் கலங்க ஆரம்பித்தனர்.
"இலங்கையில் அரண்மனை வாழ்க்கை வாழ்ந்தவர்தான் இந்த ஆனந்தி. ராணுவச் சண்டையில் இவரது வீடு சல்லடையாக்கப்பட, இவரும் கைக்குழந்தையாக இருந்த ஆதவனும் தவிர டாக்டரின் உறவுகள் அனைவரும் சடலமாகிவிட்டனர்.
இந்த சூழ்நிலையோடு ஜெர்மனிக்கு சென்ற இவர் இன்று பெரிய மருத்துவராக உயர்ந்திருக்கிறார் என்றால் எவ்வளவு வைராக்கியத்துடன் உழைத்திருக்கவேண்டும். அவரது ஆசை கனவு எல்லாமே தனது மகனை பெரிய ஆளாக்கி பார்க்கவேண்டும் என்பதே. அவரது ஆசையை ஆதவனும் நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை உள்ளது" என பேசி முடித்தபோது அரங்கில் எழுந்த கரவொலிகள் டாக்டருக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தன.
இப்பட்ததின் கதை எத்தனை ஆழமானது என்பதற்கு இரண்டு உதாரணங்களை சொன்னார் இயக்குனர் வேணுஜி.
கடந்த நான்கு வருடங்களாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் விலகியிருந்த ராஜஸ்ரீ இந்த படத்தின் கதையைக் கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் தாய் பாத்திரத்திலும் வாழ்ந்து காட்டியுள்ளாராம்.
தேசிய விருது கிடைத்தால்கூட அலட்டிக் கொள்ளாத எடிட்டர் லெனின், சமீபகாலமாக திருப்தி தராத படங்களின் பணிபுரிந்ததில்லை என்ற கொள்கையில் இருக்கிறார். இவரது கொள்கையை இப்பட்ததின் கதை தளர்த்தியதால் ஒரே நாளில் எடிட்டிங் செய்து முடித்தாராம்.
மோகன்ராஜ் இசையமைப்பில் பா.விஜய் எழுதிய பாடலை கேட்டபோது இப்புதிய இசையமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் காத்திருப்பதற்கு சாட்சியாக அமைந்தது அப்பாடல்.
|