வர்ஷா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எல். பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் வாசன் கார்த்திக் கிராமத்து முரட்டுக்காளையாக முனியசாமி கதாபாத்திர்ததில் நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் திவ்யாபத்மினி அறிமுகமாகிறார். கதை. திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கேந்திரன் முனியசாமி.
வாசன் கார்த்திக்கை தவிர படத்தில் இன்னொரு நாயகனும் உண்டு. அது இளையராஜாவின் இசை. சமீபத்தில் 'அய்யன்' படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் பதிவானது, சினேகன் எழுதிய அந்த பாடலுக்கு இளையராஜா மெட்டமைத்தார்.
"ஏ..சிவகாமி அடியே சிவகாமி... ஏ..தென்மதுர பொண்ணு
இது நான் பொறந்த மண்ணு..."
என்று தொடங்கும் அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டபோது ரெக்கார்டிங் தியேட்டரே திருவிழாக்கோலம் பூண்டதாம். பாடலை கேட்ட அனைவரும் மெய்சிலிர்த்துப்போய் இளையராஜாவை வணங்கினராம்.
இதுகுறித்து இயக்குனர் கேந்திரன் முனியசாமி கூறியதாவது :-
"படத்தின் கதையை ராஜா சாரிடம் முதன்முதலில் சொன்னபோதே, இது வித்தியாசமான கதையாக இருக்கிறது. நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என பாராட்டினார். அவரது வார்த்தை பலிக்கும் என்று நம்புகிறோம்.
'அய்யன்' பாடலுக்கு முழுக்க முழுக்க கிராமிய இசைக்கருவிகளையே ராஜா சார் பயன்படுத்துகிறார். முதல் பாடல் ஒலிப்பதிவானபோது என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் கசிந்தது. அந்த அளவிற்கு மெய்சிலிர்த்துப்போனேன். இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் பாடலாக இது அமையும்" என்கிறார் நம்பிக்கையுடன்.
|