சின்னத்திரையில் புதுப்புது சிந்தனைகளை விதைத்துவரும் பிரபு நேபாலின் எண்ணத்தில் வடிவம் பெற்றுள்ள 'என்ன பொருத்தம்' நிகழ்ச்சி செவ்வாய்கிழமை தோறும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணிவரை ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிவருகிறது.
சின்னத்திரை நட்சத்திரத் தம்பதிகளான சேத்தன்-தேவதர்ஷினி இருவரும் நடுவர்களாக பங்கேற்று நடத்தும் இப்புதிய கேம் ஷோவின் முதல் கட்ட தேர்வில் நூற்றுக்கணக்கான ஜோடிகள் கலந்து கொண்டு அவர்களில் 10 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து 4 தம்பதிகளும், மதுரை, கோவையிலிருந்து தலா 3 தம்பதிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் இந்நிகழ்ச்சியிலிருந்து பத்திர்கையாளர்களிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தினர்.
"இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குமுன் கணவன்-மனைவியான எங்களுக்குள் நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது. ஈகோ பிரச்சனையில் மன வருத்தம்கூட வந்தது. கணவர் தாமதமாக வீட்டிற்கு வந்தால் கோபத்தில் சண்டை போடுவேன். ஆனால், என்ன பொருத்தம் நிகழ்ச்சிக்கு வந்தபிறகு எங்களுக்குள் இருந்த எல்லா பிரச்சனைகளையும் புரிந்துகொண்டோம். இப்போது ஒருவருக்கொருவர் அன்பை மட்டும் பறிமாறிக் கொள்வோம்" என்றனர்.
"எங்களுக்கு திருமணமாகி மூன்றுமாதம் ஆகிறது. ஹனிமூன் போகவில்லை. ஆனால் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து என்ன பொருத்தம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே தேனிலவு கொண்டாடியதுபோல ஜாலியாக இருக்கிறது" என்று ஒரு கணவர் சொல்ல வெட்கத்தில் முகத்தை மறைத்துக்கொண்டார் அவரது மனைவி.
"நாங்கள் எல்லோரும் அக்கா தங்கையாக, அண்ணன் தம்பியாக பழகி குடும்ப நண்பர்களாக மாற இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது. எனினும் போட்டியென்று வந்துவிட்டால் யாரும் யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என கோரஸாக குரலெழுப்பிய பத்து தம்பதிகளும் தசாவதாரம் எடுக்க ஆரம்பிக்கிறார்கள்.
|