அஜித் - விஜய் பரவச சந்திப்பு: 'திருப்பதி' பூஜையில் பரபரப்பு - படங்களுடன்
15.09.2005
By: Amalan
'நடக்கும் என்பார் நடக்காகது நடக்காதென்பார் நடந்துவிடும்' . இதில் இரண்டாம் பாதி நிஜமாகிவிட்டது, யெஸ்... இரு துருவங்களாய் வசனப்போர் நடத்தி வந்த அல்டிமேட் ஸ்டாரும் இளைய தளபதியும் கட்டித்தழுவி பரஸ்பரம் அன்பை பறிமாறிக்கொண்டனர்.
|
இந்த அதிசயம் நிகழ்ந்தது 'திருப்பதி' பூஜையில். இதுவரை அடக்கிவாசித்த அஜித், ஏவிஎம். தயாரிக்கும் 'திருப்பதி' படம் மூலம் ஆர்ப்பரிக்க கிளம்பிவிட்டார்.
படத்தின் தொடக்கவிழா பாடல் பதிவுடன் இன்று காலை ஏவிஎம். ஸ்டுடியோ 3-வது தளத்தில் நடந்து. நீல நிற சட்டை குளிர் கண்ணாடி, சுருள்முடி என அம்சமாக வந்திறங்கினார் அஜித். கூடவே மனைவி ஷாலினியும். அஜித்தை வரவேற்று தயாரிப்பாளர் ஏவிஎம். சரவணன் உள்ளே அழைத்துச்சென்றதும் சம்பிரதாய பூஜைகள் நடந்தது. பூஜை நடந்த இடத்தில் கண்ணாடியால் ப்ரேம் செய்யப்பட்ட புகைப்படத்தில் ஏவிஎம். மெய்யப்ப செட்டியார் சிரித்துக்கொண்டிருந்தார்.
பூஜை முடிந்ததும் இயக்குனர் பேரரசு ஒரு காட்சியை இயக்கி முடித்தார். இந்த நேரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட திரும்பி பார்த்தால் அட ஆச்சர்யம். இளையதளபதி விஜய் அரங்கிற்குள் காலடி எடுத்துவைத்தார்.
விர்ரென்று உள்ளே நுழைந்த விஜய், அஜித்தை கட்டிப்பிடித்தும் கரம் கொடுத்தும் வாழ்த்த, அரங்கமே பரவசத்தில் கைத்தட்டியது. காமிராவும் கையுமாக போட்டோகிராபர்கள் முண்டியடித்ததை பார்த்த இரு நட்சத்திரங்களும் பரஸ்பரம் தோளில் கைப்போட்டுக்கொண்டு போஸ் கொடுத்தனர். பின்னர் விஜய் விடைபெற அரங்கின் வெளியே போடப்பட்டிருந்த மேடைக்கு வந்தனர் படக்குழுவினர். அஜித்தின் அருகே நாயகி சதாவும், மனைவி ஷாலினியும் நிற்க, வேண்டும் என்கிற அளவிற்கு 'சுட்டு' தள்ளினர் புகைப்படக்காரர்கள்.
அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் தல... தல... என்று அன்பு கூச்சல்போட அவர்களுக்கு கட்டை விரலை உயர்த்தி காட்டியும், கையை அசைத்தும் சிக்னல் காட்டிய அஜித், மறுபடியும் உள்ளே நுழைந்தார்.
அந்த தளத்தில் சவுண்ட் சர்வீஸ் உபகரணங்கள் கட்டப்பட்ட ஒரு ஜீப்பும் பைக்கும் நிறுத்திவைக்கப்பட்டிருக்க அதில் ஏறி விதவிதமாக போஸ் கொடுத்தார் 'தல'.
படத்தின் கதைப்பற்றி கடுகளவாவது சொல்லுங்களேன் என இயக்குனரின் காதை கடித்தோம். " 'திருப்பதி' என்னும் பெயரில் சவுணட் சர்வீஸ் நடத்தும் கேரக்டரில்தான் அஜித் நடிக்கிறார். காதல், வீரம், நட்பு, சென்டிமெண்ட் என அனைத்து தரப்பினரையும் 'திருப்பதி' மகிழ்விப்பான்" என்றார் ரத்தின சுருக்கமாக.
பூஜை முடிந்த கையோடு, பரத்வாஜ் இசையில் பாடல் பதிவும் நடந்தது.
"திருப்பதி வந்தா திருப்பம்
தீப்பொறி போல இருப்போம்
உனக்கு மேல எனக்கு மேல யாரு பாருடா
உன்னை என்னை வாழ வெச்ச சாமிதானடா"
என்று இயக்குனரே எழுதிய பாடல் பதிவானபோது ரசித்து பார்த்தார் அஜித்.
தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள் அனைவரும் அஜித்தை விடாமல் துரத்தியும் ம்.. ஹூம் வாயை திறக்கவில்லை அஜித்.
|