சதமடித்த சரத் - வாழ்த்திய திரையுலகம் / சிறப்பு படங்களுடன்
15.09.2005
By: Amalan
85-ல் கலையுலகில் காலடி வைத்த சரத் சரசரவென முன்னேறி 2005-ல் சதமடித்துள்ளார். அவரது 100-வது படம் 'தலைமகன்'. தயாரிப்பது ராதிகாவின் ராடான் மீடியா.
|
நூறாவது படம் என்பதால் தொடக்கவிழாவிற்கு அனைவரையும் அழைத்திருந்தார் சரத்குமார். விழா நடந்த கிண்டி லீ மெரிடியன் ஹோட்டல் திருவிழா கோலம் பூண்டிருந்தது.
ஹோட்டலின் முகப்பிலும் வழியிலும் சரத்தின் ரசிகர் மன்ற கொடி வரிசையாக காற்றில் பறந்துகொண்டிருந்தது. கறுப்பு சிகப்பில் இருந்த கொடியின் நடுவில் உழைப்பாளர் சின்னம் பளிச்சிட்டது.
சரியாக... என்பது தவறாகாமல் அழைப்பிதழலில் போட்டிருந்தபடியே காலை 9.00 மணிக்கெல்லாம் விழா தொடங்கியது. சரத்தை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர் - நடிகைகள் என திரையுலகமே திரண்டுவந்து வாழ்த்தியது.
வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக தன்னை வாழ்த்த வந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் சரத். அருகிலேயே பட்டுப்புடவை பளபளக்க பொங்கிய புன்னகை மாறாமல் விஐபிகளை வரவேற்றார் ராதிகா.
வித்தியாசமான நடன நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில் சரத் நடித்த படங்களின் தொகுப்பு திரையில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து 'தலைமகன்' டிரைலருடன் அப்படத்தின் தொடக்க விழா நடந்தது.
அதன் பின்னர், படத்தின் தயாரிப்பாளர் ராதிகா, இயக்குனர் பாலாஜி, திரைக்கதை எழுதும் சேரன், நாயகன் சரத், நாயகி நயன்தாரா, கவிஞர் வாலி, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, நடிகர்கள் கார்த்திக், வடிவேலு என பலரும் மேடைக்கு வந்தனர்.
அப்போது நடிகர் கார்த்திக் பேசியதாவது:-
"சரத் எனது நண்பன் என்று சொல்வதைவிட எனது முதலாளி என்றுதான் சொல்லவேண்டும். அவர் முதன் முதலில் தயாரித்த 'கண் சிமிட்டும் நேரம்' படத்தில் நாயகனாக நடித்ததிலிருந்து கடந்த இருபது வருடமாக அவருடன் பழகிவருகிறேன்.
சரத் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும்கூட. அவர் என்ன நினைத்தாலும் அது நடக்கும். இதைவிட ஒரு பெரிய வேலை அவருக்கு இருக்கிறது. அந்த காரியத்திலும் அவர் வெற்றி பெறுவார். அந்த காரியம் என்ன என்பதை 'தலைமகன்' வெற்றிவிழாவில் சொல்வேன்"" என்றபோது ஹோட்டலின் வெளியே பறந்த ரசிகர்மன்ற கொடி ஞாபகத்திற்கு வந்தது.
வைரமுத்து தனது வாழ்த்துரையில், "பெரியாரின் தலைமகன் அண்ணாவின் பிறந்த நாளான இன்று கலைஞரின் இளைய மகன் சரத் 100-வது படத்தை தொடங்கியுள்ளார். புஜ பலத்தை காட்டும் நடிகர்களுக்கு மத்தியில் நிஜ பலத்தை காட்டி நடிப்பவர் சரத். உடம்பு - மனசு இரண்டையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சரத் இருநூறாவது படவிழாவும் காண்பார்" என்றார்.
ஆர்.பி.சௌத்ரி, கே.எஸ். ரவிக்குமார் சேரன் என அனைவரும் வாழ்த்தி முடித்ததும் சரத்தின் 100-வது படத்தை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டது.
|