சொர்ண லஷ்மி மூவிஸ் தயாரிப்பில் கே.போஸ் இயக்கி வரும் படம் 'கொடைக்கானல்'. முற்றி்லும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. கமல்ஹாசன் பாடல்களை வெளியிட இயக்குனர் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து வாழ்த்துரை வழங்கிய கமல் பேசியதாவது:-
"பட்ஜெட்டை வைத்து பெரிய படம், சின்ன படம் என்ற கருத்தெல்லாம் இங்கு நிலவுகிறது. படம் ரீலாஸாகும் வரை அது சின்ன படமா பெரிய படமா என்பது யாருக்கும் தெரியாது. பெரிய செலவுகள் செய்து படம் எடுத்தாலும் மக்கள் கொஞ்சம் முகம் சுழித்தாலே அது சின்னப் படமாகிவிடும்.
பாரதிராஜா பேசும்போது, என்னை வியந்து பார்ப்பதாக சொன்னார். இந்த வியப்பு எங்கள் இருவரிடமும் பரஸ்பரம் உள்ளதுதான். டிஸ்கோ டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த என்னை கோவணம் கட்டி நடிக்க வைத்தவர் அவர்தான். தண்ணீர் இல்லா காடு போல நாங்களெல்லாம் பிலிம் இல்லாத காட்டினிலே படம் எடுத்தவர்கள்.
'இவனுங்களெல்லாம் என்னபடம் எடுக்குறாய்ங்க' என அவன், இவன் என்று திட்டியவர்களெல்லாம் படம் வெற்றியடைந்த பிறகு சார் என்று மரியாதையாக பேசத்தொடங்கினர். அதுபோலத்தான் தசாவதாரம் படத்திற்கு கிடைத்துள்ள வெற்றியும், வரவேற்பும் என்னை சந்தோஷப்பட வைக்கிறது.
ஆஸ்கார் விருது பற்றியெல்லாம் இங்கு பேசினார்கள். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. தமிழகத்திற்கே சிறப்புமிக்க விருந்தோம்பல் முறையை வெள்ளைக் காரணுக்கும் நாம் கொடுக்க வேண்டும். அவர்கள் இங்கு வந்து நாம் தரும் விருதை வாங்கி மகிழும் நாட்கள் வரும். அதை எனது வாழ்நாட்களுக்குள் பார்த்துவிட்டு செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது".
இவ்வாறு கமல் பேசினார்.
|