அத்திப்பூத்தாற்போல் வெளியுலகில் தலைக்காட்டும் இளையராஜா முதன்முறையாக மேடையில் தோன்றி இசையமைத்தால் அந்த சந்தோஷத்தின் எல்லையை அளவிட முடியுமா?
தன் இசைப்பயணத்தில் இரண்டுமுறை மட்டுமே மேடை கச்சேரி செய்திருக்கும் இளையராஜா பல வருடங்களுக்கு பிறகு நேற்று இசைப்பிரியர்களுக்கு அந்த பாக்கியத்தை கொடுத்தார். இதன் மூல காரணமாகவும் மூளை காரணமாகவும் இருந்த ஜெயா டி.வி.க்கு முதலில் ஒரு பாராட்டு பூங்கொத்தை தந்துவிடலாம்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள், பலவண்ண மின்விளக்குகள், அற்புத வடிவமைப்பில் அலங்கார மேடை என சொர்க்கபுரியாக காட்சியளித்த நேரு உள் விளையாட்டு அரங்கில் சரியாக மாலை 6.20க்கு தொடங்கப்பட்டது இளையராஜாவின் 'அன்றும் இன்றும் என்றும்' இசை நிகழ்ச்சி.
'அடுத்த சில கணங்களில் உங்கள் ஆன்மா வருடப்படலாம்...' என்ற குரலுடன் திரையில் ஆர்க்கெஸ்ட்ரா பற்றிய விளக்கம் ஒளிபரப்பப்பட இடையிடையே பண்ணைபுரத்துக்காரரின் பழைய நினைவுகள் கண்களுக்கு விருந்து வைத்தது.
அதுவரை கும்மிருட்டில் இருந்த மேடை குபீரென்று பிரகாசிக்க, வெள்ளாடை அணிந்த குட்டி தேவதைகள் இளையராஜாவை மேடையின் உச்சியிலிருந்து அழைந்துவந்தனர். அரங்கமே கரவொலியால் நிரம்ப 'ஜனனி.... ஜனனி....' பாடலுடன் தனது கச்சேரியை களைக்கட்டவைக்க ஆரம்பித்தார் ராஜா.
அந்த பாடலை பாடியபடியே கீழே இருந்த தனது இசை வாரிசுகள் யுவன் - கார்த்திக்கை அழைத்த இளையராஜா தன்னுடன் இணைந்து அவர்களையும் பாடவைத்தார்.
இரண்டவதாக மைக்கை பிடிக்க வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், ராஜாவின் நெற்றியில் முத்தத்தை பதித்துவிட்டு 'மஞ்சம் வந்த தென்றலுக்கு...' பாடலை பாட, ரசிகர்கள் கண்ணை மூடி ரசிக்க ஆரம்பித்தது.
அடுத்து பாடவந்த சித்ரா, ஸ்ரேயா கோஷல், ஹரிஹரன், சாதனாசர்க்கம், மதுபாலகிருஷ்ணன், சுவர்ணலதா, உமாரமணன் ஆகியோர் இளையராஜாவின் கையசைவுகளுக்கு ஏற்றவாறு தேன் குரலை காற்றில் கரைத்துவிட கட்டுப்பட்டு கிடந்தது மொத்தக்கூட்டமும்.
'நான் தேடும் செவ்வந்தி பூவிது...' பாடலை ராகதேவனே பாடிமுடித்ததும் ரசிகர்கூட்டம் ஒன்ஸ்மோர் கேட்க, 'அப்படீன்னா ஒழுங்கா பாடலையா...' என கமெண்ட் அடித்த ராஜா, அடுத்த பாடலுக்கு ஆயத்தமானார். ஆனால், ரசிகர்கள் மறுபடியும் ஒன்ஸ்மோர் குரல் கொடுத்தனர்.
இசைப்பிரியர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடிக்கவந்த ராஜா அவர்களை ஏமாற்றுவாரா!? மீண்டும் 'நான் தேடும் செவ்வந்தி பூவிது...' பாடலை தொடர மைதானம் சங்கீத சாரலில் நனைந்தது.
இசைஞானியின் கச்சேரிக்கு காது கொடுக்க கலைஞானி கமலும் ஆஜராகியிருந்தார். பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்த கமலை திடீரென்று மேடை ஏற்றியதும், "நானும் ரசிகனோட ரசிகனாக ராஜாவின் இசையை ரசிக்க வந்தேன். இங்கு நிறைய திறமையாளர்கள் கவனிக்கப்படாமலேயே இருந்துவிட்டார்கள். பாரதியாரும் இதில் அடக்கம். ஆனால், இளையராஜா கவனிக்கப்பட்டிருக்கிறார். இசையில் எனக்கு தெரிந்து ராஜாவிடமும் பாரதியாரின் திறமையை பார்க்கிறேன்" என்று வாழ்த்தினார்.
ஒரு பாடலை பாடும்படி கமலை இளையராஜா வற்புறுத்த கடைசிவரை மறுத்துவிட்டு கீழே இறங்கினார் கமல்.
உடனே ராஜா, 'குடிகாரா... குடிகாரா..' என்று திடீர் மியூசிக் போட கமல் ஷாக்காகி திரும்பியபோது, 'குடிகாரா குடிகாரா பரமகுடிக்கார...' என்று மிச்ச வார்த்தையை நிரப்பி பாட ரசிகர்கள் கைத்தட்டி ரசித்தனர்.
முன்னதாக பேசிய பாரதிராஜா.... "இளையராஜாவை பற்றி சொல்வதென்றால் இயற்கையை வர்ணிக்க வார்த்தை தேடுவதுபோல் ஆகிவிடும். தனது திறமையால் விண்ணுக்கும் மண்ணுக்கும் ராட்சத உருவம் எடுத்திருக்கிறார் ராஜா" என்றார்.
இப்படியே ராஜாவின் இசை நள்ளிரவுவரை தொடர அலுக்காமல் சலிக்காமல் அப்படியே அமர்ந்து இசைவிருந்தை அனுபவித்தனர் ரசிகர்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சொன்னதைப்போல ஆன்மா வருடப்பட்டதை உணரமுடிந்தது.
வழக்கமாக மற்ற இசை கச்சேரிகளில் ஆங்காங்கே கூத்தடிப்பதையும் கும்மாளமிடுவதையும்தான் காணமுடியும். ராஜாவின் கச்சேரியில் நடந்த நிகழ்வுகளோ வேறு. தேன் குடித்த வண்டுகளாய் மயங்கிக்கிடந்ததுதான் உண்மை.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது பார்த்திபன் சொன்னதைகூட இங்கு நினைவுப்படுத்துகிறோம்.....
"போதை தடுப்புதுறை ராஜாவின் கச்சேரிக்கும் தடை போடவேண்டும். அவ்வளவு போதையை ஏற்றுகிறது" என்றார்.
30 வயலின்கள், வீணை, தபேலா, உருமி, புல்லாங்குழல் உட்பட லைவ் இன்ஸ்ட்ரூமெண்டில் இசைக்கலைஞர்கள் வாசித்தது கச்சேரியின் ஸ்பெஷல் குவாலிட்டி.
கச்சேரி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது தியானம் செய்த திருப்தி.
|