யெஸ். விரைவில் தனது சொந்த தயாரிப்பில் வெற்றிக்கான விதையை விதைக்கவுள்ளதாக கூறுகிறார் அருண்விஜய். ஜனவரி 14-ல் ஒருபடமும், ஜூன் மாதம் ஒருபடம் என அடுத்தடுத்து இரண்டு சொந்த படங்களில் நடிக்கவுள்ளார்.
அமெரிக்கவில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள அருண்விஜய் தனது திட்டங்கள் பற்றி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
"எனது அடுத்தடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். எனது தந்தை முன்பே அறிவித்தபடி இரண்டு சொந்த படங்களில் நடிக்கவுள்ளேன். போலீஸ் அதிகாரியாக ஒரு படத்திலும், சேரன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்கிறேன்.
இந்த படங்களுக்கு முன்னதாக 'சேனல் 9' என்னும் நிறுவனமும் எனது மாமா டாக்டர் என்.எஸ்.மோகனின் Feather Touch நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறேன். மிகவும் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் டாக்ஸி டிரைவராக நடிக்கிறேன். இதற்கான திரைக்கதையை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுகிறார்.
இந்த படத்தில் ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு க்டடிடம் தாவும் காட்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரிடம் பயிற்சி எடுத்து வருகிறேன். உடல்வாகை மாற்றுவதற்காக கடுமையான உடற்பயிற்சியும் எடுத்து வருகிறேன். சண்டை பயிற்சி அமைக்க கனல் கண்ணன், பீட்டர்ஹெய்ன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இனி வெற்றிக்காக நான் வைக்கும் குறி தப்பாது" என நம்பிக்கை பொங்க கூறினார் அருண்விஜய்.
|