கடந்த சில வருடங்களாக அதிக மொழிகளில் நடித்து வருகிறவர் இவராகவே இருக்க வேண்டும். கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் என இவர் நடித்த மொழிகள் ஏராளம். வெகுவிரைவில் இந்தியும் இதில் இணைகிறது. ராஜ்குமார் சந்தோஷின் இராமாயண புராணப்படத்தில் பத்து தலை ராவணனாக தோன்றுகிறார் இவர். அதேநேரம் ராவணனை கொன்ற ராமனாக (அதாவது விஷ்ணுவாக) வும் நடிக்கிறார். இந்த அவதாரம் சிம்புதேவனின் 'அறை எண் 305ல் கடவுள்' படத்தில்!
கமர்ஷியல் படங்களில் நடித்துக் கொண்டே கலைப்பட உலகிலும் கால் ஊன்றுகிறார் இவர். ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களை இயக்கிய ப்ரியதர்ஷனுக்கு கேன்ஸ் போன்ற உலகப்பட விழாக்களில் தனது படங்கள் பங்கு பெற முடியவில்லையே, விருது எதுவும் வாங்கவில்லையே என நீண்டநாள் ஏக்கம். இதனை போக்குவதற்காக அச்சு அசலான கலைப்படம் ஒன்றை உருவாக்குகிறார். தமிழர்களின் அதிர்ஷ்டம், அது தமிழ் படம்.
காஞ்சிபுரம் நெசவாளர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது. இதற்கு 'காஞ்சிபுரம்' என்றே பெயர் வைத்துள்ளார் ப்ரியதர்ஷன். காஞ்சிபுரத்தின் ஹீரோ பிரகாஷ்ராஜ். இவருக்கு ஜோடி ஸ்ரேயா ரெட்டி.
தனது கனவுப் படம் என்பதால் வரலாற்று நிகழ்வுகளை ஆராய்ந்து மிக நுணுக்கமாக ஸ்கிரிப்டை உருவாக்கியிருக்கிறார் ப்ரியதர்ஷன். 'காஞ்சிபுரம்' காஞ்சிபுரம் பட்டு மாதிரி உலகப்புகழ் பெறுமா?
|