எஸ்.ஆர்.எம். தயாரித்த 'பிறப்பு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாக்யராஜ், கே.ஆர்.ஜி., இயக்குனர் அமீர், புதுமுக நடிகர் பிரபா, நடிகை கார்த்திகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆடியோவை கே.ஆர்.ஜி. வெளியிட பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
பிறகு பேசிய பாக்யராஜ் சில மலரும் நினைவுகளை சொல்லி விழாவை கலகலப்பாக்கினார். நடிகை சுலக்ஷ்னாவை 'தூறல் நின்று போச்சு' படத்தில் அறிமுகப்படுத்தியது, 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் பாரதிராஜாவிடம் சண்டை போட்டது என மலரும் நினைவுகளில் பல சுவாரஸியங்கள்.
'16-வயதினிலே' படப்பிடிப்பில் நடிகை ஸ்ரீதேவி பாக்யராஜை கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கிறார். அவரும் கோபித்து கொண்டு, ஒரு பேப்பரில் எழுதி வைத்து விட்டு படப்பிடிப்பு தளத்திலிருந்து தலைமறைவாகியிருக்கிறார். இறுதியில் பாரதிராஜா அவரை கண்டுபிடித்து மீண்டும் அழைத்து வந்திருக்கிறார்.
இதனை கூறிய பாக்யராஜ் முதல் படத்தில் இப்படியெல்லாம் பிரச்சனைகள் வரும் அதற்காக தளர்ந்து விடக்கூடாது என 'டச்'சிங்காக பேசி 'பிறப்பு' விழாவை சிறப்பு செய்தார்!
|