ரஜினியின் சிவாஜி கதை!
20.09.2005
By: JBR
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் சிவாஜி. கல்வியல் நிபுணத்துவம் பெற்றவர். இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர். இதற்காக தனது கோடிக்கணக்கான சொத்துக்களை இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த செலவிடுகிறார் சிவாஜி. ஆனால், லஞ்சம் எனும் பேய் அவரது முயற்சிக்கு பல்வேறு வகையில் தடை போடுகிறது. அவற்றை சமாளித்து கனவை நனவாக்கும் நேரம், போட்டி கல்வி நிறுவனங்கள், சிவாஜியின் முயற்சிக்கு அரசிடம் தடை கோருகின்றன. அரசு மறுக்கிறது. மறுத்த மறுகணம் ஆட்சியை கவிழ்க்கிறது எதிரணி. மாற்று ஆட்சி சிவாஜியின் கல்வி நிறுவனங்களை தரைமட்டமாக்க உத்தரவிடுகிறது.
|
தனது கனவுக்காக மொத்த சொத்தையும் இழந்து நிற்கும் சிவாஜி, எப்படி வெறுங்கையால் எதிரணியை வீழ்த்துகிறார் என்பது க்ளைமாக்ஸ்!
ரஜினியின் சிவாஜி படத்தை குறித்து உலவும் ஓராயிரம் கதைகளில் ஒன்றுதான் இங்கு நீங்கள் படித்தது. இந்த கதைக்குதான் திரைக்கதை அமைத்து வருகிறார் ஷங்கர் என நம்பிக்கையுடன் கதைக்கிறது கோடம்பாக்கம்.
ஆனால், அப்படியிருக்க சான்ஸே இல்லை என்பது சிலரது அபிப்ராயம். காரணம், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திவரும் ஆஸ்ரமம் கல்வி நிறுவனம். பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டுமே படிக்க முடிகிற அளவுக்கு காஸ்ட்லி கல்விக்கூடம் இது. நிஜம் இப்படி இருக்க, இதற்கு நேர் எதிரான கதையில் நடிப்பாரா ரஜினி? என லாஜிக்குடன் கேள்வி கேட்கிறார்கள்.
ரஜினிதான் பதில் சொல்ல வேண்டும்!
|