பத்து வேடங்களில் கமலின் நடிப்பு, 50 கோடி ரூபாய் செலவில் ஆஸ்கார் பிலிம்சின் தயாரிப்பு என பிரமாண்டத்தின் எல்லை தொட்டுள்ளது தசாவதாரம்.
கடந்த மாதமே நடக்க வேண்டிய இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சில காரணங்களால் தள்ளிப்போனது. பாடல்களை வெளியிட ஜாக்கிசானை அழைத்துள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
இந்நிலையில் வரும் 25-ம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடப்பது உறுதியாகிவிட்டது. இதற்காக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விழாவிற்காக கண்ணைக்கவரும் வகையிலான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி, அமிதாப்பச்சன், ரஜினி, சிரஞ்சீவி உள்ளிட்ட இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இதனால் பாதுகாப்பை பலப்படுத்த சென்னை நகர காவல்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பெருமளவில் போக்குவரத்து நெரிசல் ஏர்படும் என்பதால் அதனை சீரமைக்கும் திட்டத்தையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
விழாவிற்காக ஜாக்கிசான் மற்றும் அவரது உதவியாளர்கள் தனி விமானத்தில் சென்னை வருகின்றனர்.
ஜாக்கிசானின் பாதுகாப்பிற்காக மும்பையிலிருக்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க திரையுலக நட்சத்திரங்களும் அவர்களது குடும்பங்களுமே அரங்கில் அனுமதிக்கப்படுவர். அழைப்பிதழ் இல்லாமல் வரும் வி.ஐ.பி.க்கள் கூட அனுமதிக்கப்படமாட்டார்களாம்.
'தசாவதாரம்' படத்தை 'சிவாஜி'யை விட ஆயிரத்து ஒரு ரூபாய் அதிகம் கொடுத்து கலைஞர் டி.வி. வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாடல் வெளியீட்டு விழாவையும் நேரடியாக வழங்கவுள்ளதாம் கலைஞர் டி.வி. எனவே குறிப்பிட்ட பத்திரிகை மற்றும் டி.வி.களுக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்படவுள்ளதாம்.
விழாவிற்கு ஜாக்கிசானுக்கு கொடுக்கப்படும் தொகையை வைத்து பெரிய படமே எடுத்துவிடலாம். சுமார் 6கோடி ரூபாய் ஜாக்கிசானுக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதுதவிர அவர் வந்து போகும் செலவுகளும், தங்கும் வசதி, அவரது உதவியாளர்களுக்கான செலவும் தனியாம்.
|