நடிகர்களில் உயரமானவரான நெப்போலியனும் அந்தக் கூட்டத்தில் ஒருவராக இருந்தார். இவருக்கு இங்கென்ன வேலை என்று சங்க நிர்வாகிகளிடம் கேட்டால் எங்கள் சங்கத்தின் புதிய தலைவர் நெப்போலியன்தான் என்றபடி இனிப்பை கையில் திணித்தனர். ( நெப்போலியனும் கூடைப்பந்தாட்ட வீரர் ஆவார்).
இதற்கு முன் தலைவராக இருந்த தியானேஸ்வரனை நீக்கிவிட்டார்களாம். நெப்போலியன் புதிய தலைவரானதில் ஆளாளுக்கு சந்தோஷத்தில் கைகுலுக்கி வாழ்த்துச் சொல்ல, பழைய தலைவர் தியானேஸ்வரன் மீது சராமாரி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர்.
அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :
கூடைப்பந்து சங்கத் தலைவராக தியானேஸ்வரனை நாம் அறிவோம். கூடைப்பந்து விளையாட்டையும், அதற்கான சங்கத்தையும், தன் வாயில் போட்டுக் கொண்ட கதையை அறிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது.
1983-இல் தமிழ்நாடு கூடைப்பந்துச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற தியானேஸ்வரன் அதிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாகச் சங்கத்தை தன் உடும்புப் பிடியில் வைத்துள்ளார். இதற்காக அவர் செய்துள்ள சூழ்ச்சிகளும் மோசடிகளும் ஏராளம். தன் பதவியை நிரந்தரமாக்கிக் கொள்வதற்காகவே அவர் சங்க விதிகளை திருத்தியுள்ளார்.
சங்கத்திற்கு சொந்தமான செல்வி.ஜெ.ஜெயலலிதா உள் விளையாட்டு அரங்கு உண்மையிலேயே கூடைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படவில்லை. திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு, கோடீஸ்வரத் திருமணங்கள், கேளிக்கைகள், இவற்றுக்கெல்லாம் கொழுத்த வாடகைக்கு விடப்ப்டுகிறது. விளையாட்டு வீரர்ரகள் தங்குவதற்கான ஓய்வு விடுதிகளும் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த வசூல் பணம் எதுவும் தமிழ்நாடு கூடைப் பந்துச் சங்கத்திற்கு போவதில்லை.
பல மாவட்டச் சங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தேர்தலே நடைபெறாமல் உள்ளது. குறிப்பாக சென்னை மாவட்டத்திற்கு கடந்த 20 ஆண்டுகளாகத் தேர்தலே நடைபெறவில்லை.
தியானேஸ்வரன் மகன் செந்தூரீஸ்வரனையே சங்கத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக நியமித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர்களை தியானேஸ்வரன் இந்த விளையாட்டை விட்டே வெளியேற்றிவி்ட்டார். திறமை மிக்க நடுவர்கள் பலரையும் அவர் நீக்கம் செய்து விட்டார்.
தியானேஸ்வரனால் தமிழ்நாடு கூடைப்பந்து விளையாட்டு செத்து விட்டது. தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் விளையாட்டு அரங்கம் அவரது குடும்ப சொத்தாகி விட்டது. அதை மீட்டுத் தமிழகத்தில் கூடைப்பந்து விளையாட்டிற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்த புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது அவசியமாகி விட்டது.
இதன் காரணமாக தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக இன்று முதல் நடிகர் நெப்போலியனை ஒரு மனதாக தேர்ந்து எடுத்துள்ளோம்.
|