பட்டாசு வெடித்து கொண்டாட, பிரியாணி விருந்து வைத்து மகிழ விழாக்கால பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்த செய்தி. ஒரு மாதகாலமாக எதிர்பார்த்து காத்திருந்த இந்தியர்களின் செவிகளில் தேன் வந்து பாய்ந்துள்ளது.
பிரிட்டிஷ் இயக்குனர் டேனி பாய்ல் இயக்கத்தில் உருவாகிய படம் ஸ்லம்டாக் மில்லியனர். இப்படத்தில் ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு ஏற்கனவே இசை உள்பட பல பிரிவுகளுக்கு 'கோல்டன் குளோப்' விருது கிடைத்தது. ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடந்தது. கோலகலமாக தொடங்கிய விழாவில் ஒவ்வொரு பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கோடிக்கனக்கான இந்திய இதயங்களின் லப்டப்பை எகிற வைத்துக் கொண்டிருந்தது. அந்த வேளையில்தான் இந்திய சினிமாக்காரர்களின் இத்தனை ஆண்டு கனவு நனவாகியது. ஸ்கோர் மியூசிக், பாடல் இசை என ஸ்லம் டாக் படத்திற்கு இசையமைத்த ரஹ்மானுக்கு அடுத்தடுத்த இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட ரஹ்மானின் முகத்தில் பரவசம்.
இதுதவிர இயக்கம், எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங். ஒளிப்பதிவு என மொத்தம் 8 பிரிவுகளில் ஸ்லம்டாக் படத்திற்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருது வாங்கிய பாடலையும் மேடையில் பாடிகாட்டிய ரஹ்மான், எனக்கு கிடைத்த விருதை பாரத மாதாவிற்கு சமர்ப்பிக்கிறேன் என்றவர், இறுதியாக "எல்லா புகழும் இறைவனுக்கே" என தமிழில் உச்சரிக்க நிகழ்ச்சியை லைவ்வாக பார்த்த தமிழர்கள் அனைவரும் சிலிர்த்தனர்
விருதுகளின் முழு விவரங்களைக் காண , http://www.oscar.com/nominees/?pn=nominees
|