தமிழ் சினிமாவிலிருந்து சி.எம்.ஆனவர்கள் முதல் நேற்றைய மழையில் துளிர்த்த சில்வண்டு நடிகர்கள்வரை யாரும் பத்திரிகைகளையும், காட்சி ஊடகங்களையும் பகைத்துக் கொண்டதில்லை. மார்க்கெட் தளர்ச்சியடையும்போதெல்லாம் தங்கள் வளர்ச்சிக்கு அவர்கள் இவற்றையே நம்புகின்றனர். கவுண்டமணி விதிவிலக்கு.
எந்த ஊடகத்தையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை இவர். பேட்டி என்று யாரிடமும் வழிந்ததில்லை. இருந்தும் மூன்று முறை தமிழ் சினிமாவிலிருந்து முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, மீண்டு வந்திருக்கிறார். வேறு எந்த நடிகராலும் சாத்தியமாகாத சாதனை இது.
நான்காவது முறையாக தமிழ் சினிமாவை கலக்க வருகிறார் கவுண்டர். இவருடன் இந்தமுறை கைகோர்த்திருப்பவர், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
ரஜினி நடிக்க மறுத்த ஜக்குபாயை சரத்குமாரை வைத்து இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தசாவதாரம் எனும் பிளாக்பஸ்டருக்குப் பிறகு இயக்கும் படம். ஜக்குபாய் வெற்றிபெறும் ஸ்கிரிப்ட்தான் என்று ரஜினிக்கு காட்ட வேண்டிய நிர்பந்தம். எல்லாமுமாக சேர்ந்து ஜக்குபாயில் தீவிரம் காட்டுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதற்காக இவர் கைகோர்த்திருப்பது கவுண்டமணியுடன். ஆமாம்... ஜக்குபாயின் காமெடி ஏரியாவை கலகலக்கப் போகிறார் கவுண்டமணி. கடைசியாக சத்யராஜூடன் நடித்த படம் கவுண்டருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்ததால், கவுண்டமணியின் திரும்பிவரவை திகிலுடன் பார்க்கிறார்கள் மற்ற காமெடியன்கள்.
|