'நாளைய மனிதன்', 'அதிசய மனிதன்', 'ஜென்ம நட்சத்திரம்' போன்ற திரில்லர் படங்களை இயக்கி தனக்கென்று தனி பாணியை வைத்துள்ள தக்காளி C.சீனிவாசன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தை இயக்கியுள்ளார். 'அம்முவாகிய நான்' புகழ் பாரதி நாயகியாகவும், முக்கிய வேடத்தில் ஸ்ரீமன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏர்மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலா என்ற புதுமுகம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தயாரிப்பாளர் ஆ.டி.சௌத்ரி பாடல் கேசட்டை வெளியிட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார்.
"ஒருநாள் இரவில் தக்காளி சீனிவாசன் சாரிடமிருந்து எனக்கு போன் வந்தது. ஒரு படம் எடுக்கப்போறேன். நீங்கதான் நாயகன் என்றார். இரவு நேரம் பேசுவது எதையும் நம்பமுடியாது காலையில் பேசுங்கள் என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். ஏனென்றால் என்னையெல்லாம் கதாநயாகன் என்றால் எப்படி நம்புவது? ஆனால் தக்காளி சார் சொன்னது போலவே செய்தார்.
இது திகில் படம் மட்டுமல்ல செண்டிமெண்ட், காமெடி ஆக்ஷ்ன் எல்லாம் கலந்த படமாக இருக்கும். எங்கள் வெற்றிக்கு எல்லோருடைய வாழ்த்தும் வேண்டும்" என்ற கனல்கண்ணனின் பேச்சில் கலகலப்பு தெரிந்தது.
"கனல்கண்ணனை ஸ்டண்ட் மாஸ்டராக தான்தான் அறிமுகப்படுத்தினேன். நல்ல திறமைசாலியான அவருக்கு நடிப்பு ஆசையும் இருந்தது. இந்த படம் நன்றாக ஓடி நான்கைந்து கோடி சம்பளம் வாங்கும் நடிகராக உயர வேண்டும்" என வாழ்த்தினார் கே.எஸ்.ரவிக்குமார்.
|