எந்த விழாவாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்குத்தான் முதல்மரியாதை தருவார்கள் தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள். ஆனால் தசாவதாரம் விழாவில் நடந்ததெல்லாம் தலைகீழ்.
அழைப்பிதழுடன் நுழைவுவாயிலில் காட்டிக்கூடிய கூப்பனுடன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சென்றால் இந்த கேட், அந்த கேட் என நிருபர்களை அலைக்கழித்தனர் போலீஸார். இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய வழி என கடைசியாக இருந்த ஒரு நுழைவுவாயிலை காட்டினார்கள்.
போலீஸார் சுட்டிக்காட்டிய இடத்தில் கிலோமீட்டர் தூரத்திற்கு கியூ நிற்க, 'வரிசையில் நின்று வாங்க' என அலட்சியம் காட்டினார் ஒரு இன்ஸ்பெக்டர். நம்முடன் இன்னும் சில பத்திரிகை நண்பர்கள் இருக்க 'சார் நாங்க பத்திரிகைகாரங்க சீக்கிரமா போகனும்' என அடையாள அட்டையை காண்பித்தபோது இருக்கட்டும் அதனாலென்ன? என்றவாறு நெஞ்சில் கைவைத்து தள்ளாத குறையாக விரட்டினர்.
இதனையடுத்து நிருபர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து மேலதிகாரிகளிடம் முறையிடவே ஒரு வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஸ்டேடியத்திற்குள் நுழைந்தால் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஈ கேலரி. விழா செய்தியை மக்களுக்கு கொண்டு செல்லும் பத்திரிகையாளர்கள் ரசிகர்கள் கூட்டத்தோடு உட்காரவைக்கப்பட மேலும் எரிச்சலடைந்தனர் நிருபர்கள்.
ஒரு கட்டத்தில் விழாவை புறக்கணித்துவிட்டு எழுந்து வரலாமா என்று நினைத்தால் வெளியே திரும்பமுடியாத வண்ணம் பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டிருந்தது. பிரமாண்ட விழா, கோடிக்கணக்கில் செலவு என மார்தட்டிக்கொள்ளும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் பத்திரிகையாளர்களை மனதில் கொள்ளாதது ஏனோ?
பத்திரிகையாளர்களுக்கு நடந்த கதி இப்படியென்றால் நடிகர், நடிகைகளுக்கும் அவமானம் நேர்ந்தது. மாதவன், நரேன், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி போன்றவர்களுக்கு இருக்கை தராமல் மணிக்கணக்கில் இழுத்தடித்தனர். அவர்கள் கோபித்துக்கொண்டு புறப்பட தயாரானபோது விழாக்குழுவினர் சிலர் ஓடி வந்து சமாதானம் செய்து அமர வைத்தனர். பெரிய விழா என விளம்பரப்படுத்தப்பட்ட போதிலும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறைவாகவே தென்பட்டனர்.
இந்தக் காமெடிகளையெல்லாம் தாண்டிய ஹைலைட்... படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் விழா நடந்த நேரத்தில் அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் ஹாயாக இருந்ததுதான்.
|