கனகரத்னா மூவிஸ் சார்பில் ரமேஷ்பாபு தயாரிப்பில் பிரபுதேவா இயக்கிய படம் 'போக்கிரி.' விஜய்-அசின் நடித்து வெளிவந்த இப்படத்துக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு இணையதளங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்காமல் செய்தி சேகரிக்கும் உரிமைக்கு தடையாக இருப்பதாக கனகரத்னா மூவிஸ் மற்றும் விஜய் தரப்புமீது இணையதள அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
இதனையடுத்து இனி கனகரத்னா மூவிஸ் தயாரிக்கும் படங்கள் மற்றும் விஜய் நடிக்கும் படங்கள் சம்பந்தப்பட்ட செய்திகளையோ, புகைப்படங்களையோ பிரசுரிப்பது இல்லை என இணையதளங்கள் முடிவு செய்தன.
இந்த தடை கடந்த சில நாட்களாக செயலாக்கத்தில் இருந்தன. இந்நிலையில் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு சமீபத்தில் நம்நாடு படத்தின் பிரஸ்மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது இணையதள நிருபர்களை அழைத்த ரமேஷ்பாபு 'போக்கிரி' படவிழாவில் அழைக்கப்படாமல் இருந்த சம்பவத்திற்காக ஒவ்வொரு இணையதள நிருபர்களிடமும் தனித்தனியாக வருத்தம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அவரது பட நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு இனி தொடர்ந்து ஆதரவு தருவது என்று முடிவுசெய்யப்பட்டு, போடப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்டது.
|