நேற்றுமுன்தினம் ராஜசேகர் தனது மனைவி ஜீவிதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோயில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்டார். நிகழிச்சி முடிந்தபின் நிருபர்களின் கேள்விகளுக்கு ராஜசேகர் பதிலளித்தார்.
சிரஞ்சீவி அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றவர், "சிரஞ்சீவி இதுபற்றி எதுவும் கூறவில்லை. மீடியாக்கள் தான் தேவையில்லாமல் பெரிதுபடுத்துகின்றன" என்றார்.
ராஜசேகர் இப்படி ஒளிவுமறைவின்றி பேசிய பிறகும் நிருபர்கள் விடவில்லை. சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பீர்களா என்று மேலும் கேட்டனர். ராஜசேகர் ஆம், இல்லை என்று பதிலளித்திருக்கலாம். அதைவிடுத்து, "சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவம் இல்லை" என உண்மையைப்பேச, அது சிரஞ்சீவியின் ரசிகர்களை உசுப்பி விட்டது.
தனியார் சேனல்கள் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் ராஜசேகரின் 'உண்மை' பேச்சை திரும்பத்திரும்ப ஒளிபரப்பி சிரஞ்சீவியின் ரசிகர்களை கொம்பு சீவி விட்டன.
நேற்று காலை செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து ஹைதராபாத்திலுள்ள தனது வீட்டிற்கு மனைவி குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த ராஜசேகரின் காரை சிரஞ்சீவியின் ரசிகர்கள் வழிமறித்து சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து ராஜசேகரின் தோள், முகம் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. அவரது குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அசம்பாவிதத்தை தொடர்ந்து ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் ராஜசேகரும், அவரது மகளும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்குப் பிறகும் ஆத்திரம் அடங்காத சிரஞ்சீவியின் ரசிகர்கள் ராஜசேகரின் உருவபொம்மையை அங்கங்கே எரித்து போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவங்களை தொலைக்காட்சியில் பார்த்த சிரஞ்சீவி ராஜசேகர் வீட்டிற்குச் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டார். இருவரும் கூட்டாக பேட்டி அளித்ததைத் தொடர்ந்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.
|