'ஜில்லுனு ஒரு காதல்' படத்தில் சூர்யாவும், பூமிகாவும் இடம்பெறும் காட்சி நேற்று கோவையில் ஷூட் செய்யப்பட்டது. இடம், கோவை வேளாண்மை பல்கலைக்கழகம். இங்குள்ள நூலகத்தில்தான் படப்பிடிப்பு.
காலையிலேயே கேமராவும் கையுமாக நூலகத்தை ஆக்ரமித்திருக்கிறது படப்பிடிப்புக்குழு. வழக்கம்போல புத்தகங்கள் வாங்க வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி. படப்பிடிப்பு நடக்கப்போவது குறித்து அவர்களிடம் எந்த தகவலும் அறிவிக்கவில்லையாம் பல்கலைக்கழக நிர்வாகம்.
மேலும், நூலகத்தில் புத்தகம் எடுக்கச் சென்ற மாணவர்கள், படப்பிடிப்புக் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தங்கள் பல்கலைக்கழகத்தில் நுழைந்து தங்களையே தடுக்கும் படப்பிடிப்பு குழுமீது ஆத்திரம் கொண்ட மாணவர்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வரும் ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு தேர்வு நடக்க இருக்கிறது. இப்போது இன்டர்னல் தேர்வுகள் நடக்கின்றன. புத்தகங்கள் அவசியம் தேவைப்படும் காலம் இது. இந்த நேரத்தில் சினிமாக்காரர்கள் நூலகத்தை அடைத்துக்கொண்டிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
'ஜில்லுனு ஒரு காதல்' டீம் மூன்று நாள்களுக்கு நூலகத்தை விட்டு நகரப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது. இதனால் பல்கலைக்கழகத்தில் பதட்டம் உருவாகும் நிலைமை.
தேன்கூட்டில் கை வைப்பதும் மாணவர்களை எதிர்ப்பதும் ஒன்று. இதனை 'ஜில்லுனு ஒரு காதல்' படக்குழு பிராக்டிகலாக அறிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது!
|