ஜெயம்ரவி, ஜெனிலியாவுக்கு விருது
- 31.08.2007
By JBR
சினிமா நட்சத்திரங்களுக்கு எதற்கு பஞ்சமிருக்கிறதோ, விருதுக்கு மட்டும் குறைவில்லை. மத்திய, மாநில விருதுகளுடன் பத்திரிகைகள், சேனல்கள் தரும் விருதுடன், கம்பன் அமைப்பு, காவிரி நற்பணி மன்றங்களெல்லாம் வீரவாளும், தஞ்சாவூர் தட்டும் கொடுத்து, கனவுக்கன்னி, சேவை நாயகன் போன்ற பட்டங்களை வாரி வழங்குகின்றன.
|
|
|
நடனக் கலைஞர்களுக்கான ஸ்பெல் பவுண்ட் அமைப்பு வருடா வருடம் திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது. சென்ற ஆண்டுக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களை இவ்வமைப்பின் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. பிரேவோ விருது என்றழைக்கப்படும் இவ்விருது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் விழாவில் நட்சத்திரங்களுக்கு அளிக்கப்படும்.
சென்ற ஆண்டின் சிறந்த படமாக 'வெயில்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெயிலுக்கு மேலும் இரு விருதுகள். சிறந்த குணச்சித்திர நடிகர் (பசுபதி), சிறந்த இயக்குனர் (வசந்தபாலன்).
'உனக்கும் எனக்கும்' படத்தில் நடித்த ஜெயம்ரவியும், 'சென்னை காதலி'ல் நடித்த ஜெனிலியாவும் சிறந்த நடிகர், நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடிப்புக்கான சிறப்பு விருது பெறுவோர் பரத் (எம்மகன்), சந்தியா (வல்லவன்).
சிறந்த இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா (வல்லவன்). பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது காகா ராதாகிருஷ்ணன், எஸ். என். லட்சுமி மற்றும் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு வழங்கப்படுகிறது.
பிரேவோ விருதின் மிக முக்கியமானது, 'கனவுதேவதை' விருது. சென்ற ஆண்டுக்கான கனவு தேவதையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், நமிதா! இந்த விருது மட்டும் நூறுசதவீதம் பெண்களுக்கானது. ஆண்களுக்கு அதாவது நடிகர்களுக்கு நோ இடஒதுக்கீடு.
நடிகர்கள் 50% ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தலாம்!
|