A. வெங்கடேஷ், லிங்குசாமி ஆகியோரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ள கனகு 'பிடிச்சிருக்கு' படம் மூலம் இயக்குனராகியுள்ளார். கூல் புரொடக்ஷ்ன் சார்பில் சித. செண்பககுமார் தயாரிக்கும் இப்படத்தின் நாயகனாக 'முருகா' அசோக், நாயகியாக மும்பையை சேர்ந்த விசாகா நடிக்கின்றனர். மற்றும் கஞ்சாகருப்பு, சம்பத், சரண்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தூத்துக்குடியை கதைகளமாக கொண்ட காதல் கதையாம் இது. சென்னை, மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களிலும் கதை பயணிக்கிறதாம்.
நிறைய காதல் கதை வந்தாச்சு. நீங்க என்ன புதுசா சொல்லப்போறீங்க? என்று இயக்குனரிடம் கேட்டால், 'காதல் பழசுதான் சார் ஆனால் நான் சொல்லும் சம்பவங்கள் புதுசு' என்னும் கனகு, இயற்கையுடன் காதலை பின்னி புதிய விளக்கம் ஒன்றை தர ஆரம்பித்தார்.
"காதலை அவரவர் எண்ணத்திற்கேற்ப ஒப்பிடலாம். காதல் நீரைப் போல என்றால்.. ஆகாயத்தில் தோன்றினாலும் கீழே விழும் நீரைப் போன்று எளிமையானது. நீரை கொள்கலனில் நிரப்பி அழுத்தினால் அடங்காது பீறிட்டு சீறும். காதலும் அப்படிதான். இரண்டுமே தோன்றுமிடம் தூய்மையானது. பள்ளம் நோக்கி பாய்வது போல உள்ளம் நோக்கி செல்லக்கூடியது காதல்.
நீருள்ள இடமும் காதல் கொண்ட மனமும் எப்போதும் ஈரமுடன் இருக்கும். இரண்டுக்கும் விலைமதிப்பில்லை. ஆனாலும் எளிமையானது. குடிசைக்கும் கோபுரத்துக்கும் பொதுவானது. உயிர்வாழ துணைபுரிவது.. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த உலகில் இயல்பானது எதுவோ அதுவே அழகானது. யதார்த்தமானது எதுவோ அதுவே வசிகரமானது. மலையின் கம்பீரம், புல்வெளியின் பசுமை, கடலின் அலை, ஆற்றின் பாதை, மரங்களின் அழகு, பூக்களின் நிறங்கள் எல்லாவற்றிலும் மனித சக்திக்கு எட்டாத அழகிருக்கிறது. எல்லாம் தானாக உருவானவை. ரசிக்க ரசிக்க பார்க்கத் தூண்டுபவை. அதைபோலவே இயல்பாக மலரும் காதலும் அழகானது. யதார்த்தமானது.
பல மிகைப்படுத்தப்பட்ட காதல் கதைகளை பார்த்து மக்கள் சோர்ந்து போய்விட்டார்கள். காதலும் அதை வெளிப்படுத்தும் விதமும் இயல்பாக இருக்கும். வேலைவாய்ப்பு விண்ணப்பத்திற்கு வேலை கிடைப்பது போல கணித சூத்திரத்திற்கு விடை காணப்படுவது போல காதலைச் சொல்லி வருகிறார்கள். காதல் தோன்றுவது ஒரு மொட்டு மலர்வதைப் போல, தென்றல் தழுவுவதைப் போல, பொழுது விடிவதை போல. எந்த வரையறைக்குள்ளும் அடக்க முடியாத அதை உணர மட்டுமே முடியும். காதல் பிறப்பதும் அதை உரியவரை அடைவதும் அத்தனை நுணுக்கமான மெல்லுணர்வு. அதை நான் செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறேன்" என்னும் இயக்குனர் மேடை ஏறினால் நிச்சயம் கைதட்டல் வாங்குவார்.
|