நாயகன் புதுசு, இயக்குனர் புதுசு, தயாரிப்பாளர் புதுசு என புதுமுகங்கள் ஒன்றுகூடி வண்ணம் தீட்ட முயற்சித்திருக்கும் படம் இந்த 'நிறம்.'
இயக்குனராகவேண்டும் என்ற கனவோடு உள்ளங்காலின் மென்மை தேயுமளவிற்கு கோடம்பாக்க தெருக்களில் அலைந்துகொண்டிருப்பவர் நாயகன் மணி. இவருடன் இருக்கும் ராஜீ, ஸ்ரீதர் ஆகிய நண்பர்களும் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பார்கள்.
பசி, பட்டினி, பொருளாதார சிக்கலுடன் போராடும் இவர்களிடம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது நம்பிக்கை. என்றாவது ஒருநாள் ஜெயிப்போம் என்று கனவு கோட்டை கட்டுபவர்களுக்கு கிடைப்பது என்னவோ அவமானங்களும் நிராகரிப்புகளும்தான்.
மனதில் நம்பிக்கை நங்கூரம் பாய்ச்சியிருப்பதால் போராட்ட துடுப்பை தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர் சந்தானபாரதியின் மகள் சிந்தூரியுடன் நட்பு ஏற்படுகிறது இந்த இளைஞர்களுக்கு.
மணி மற்றும் அவரது நண்பர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் சிந்தூரி அவர்களின் வெற்றிக்கு வித்திட, சோதனைகளை கடந்து நண்பர்கள் சாதிப்பதே கதை.
இயக்குனராக முயற்சிக்கும் கேரக்டரில் மணி அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பில் கூடுதல் முயற்சியை மேற்கொண்டால் வெற்றிக்கு தோழனாகலாம் மணி. நாயகி ரிஷா, சிந்தூரி, பாயல் என இளஞ்சிட்டுகளும் தங்கள் பங்குக்கு நடித்திருக்கின்றனர்.
பாலாஜி, முத்துக்காளை காமெடிகள் வெறும் கிச்சுகிச்சுகளே. சபேஷ்- முரளி இசை. பாடல்கள் பாராட்டும் அளவிற்கு இல்லை.
புதுவசந்தம் ஸ்டைலில் ஒரு படத்தை கொடுத்துவிடலாம் என்று கதை பண்ணியிருக்கிறார் இயக்குனர் எஸ்.கே. கிருஷ்ணா. இந்த காலத்தில் அதெல்லாம் எடுபடாது என்பதை யாராவது எடுத்துச்சொல்லியிருக்கலாம்.
'நிறம்' பளிச்சென்று தெரியவில்லை.