பாட்டி சுட்ட வடையை காக்கா ’சுட்ட’ மாதிரியான கதையின் நெடி, தோரணையின் ஓப்பனிங்கிலேயே ரெடியாக, படம் பார்த்துட்டு வெளியேவரும் ஆடியன்ஸின் தோரணையும் மாறிவிடுகிறது.
ஊர்ல சும்மா சுற்றிக்கொண்டிருக்கும் விஷால், ஒருநாள் வீட்டுக்கு திரும்பும்போது அம்மாவின் விசும்பலை பார்க்கிறார். ’ஏம்மா அழுவுற’ன்னு விஷால் அக்கறையாக விசாரிக்க, “இருபது வருஷதுக்கு முன்னாடி காணாம போன உங்க அண்ணன் ஞாபகம் வந்துருச்சுடா” என ப்ளாஸ்பேக் சொல்ல, அவ்வளவுதான், மெட்ராசுக்கு போயி அண்ணனை கண்டுபுடிச்சு கூட்டிட்டு வர்றேன்னு வண்டி ஏறுகிறார் விஷால்.
வந்த இடத்தில் பிரகாஸ்ராஜ்,கிஷோர்னு ரெண்டு தாதாக்களை பகைத்துக்கொள்ளும் நிலை. பைட்டு, பாட்டுன்னு படம் நகர்ந்துகொண்டிருக்க, பாதியில் தெரிகிறது தாதாவில் ஒருத்தரான கிஷோர்தான் விஷாலின் அண்ணன் என்று. அப்புறமென்ன அம்மாவுக்கு கொடுத்த வாக்கை விஷால் காப்பாத்தும் கதைதான் கிளைமாக்ஸ்.
படம் ஆரம்பிச்ச இருபது நிமிடம் சும்மா சர்....ருன்னு நகரும் படம், அதன்பிறகு சவசவன்னு ஆகும்போதே தோரணை,சோதனையாக மாறுகிறது. ‘டேய்.. நீ அடிச்சா பணம்; நான் அடிச்சா பொணம்’ என்பதாக அடிக்கடி பஞ்ச் அடிக்கும் விஷாலை நோக்கி ’வேணாம் அழுதுருவோம்...’ என கையெடுத்து கும்பிடும் ரசிகர்களை தியேட்டர் இருட்டிலும் தெளிவாக பார்க்கமுடிகிறது.
கிஷோர் ஆட்களிடம் நசுங்கிய நார்த்தங்காய் மாதிரி அடிவாங்கும் விஷால், அடுத்த சீனில் ஃப்ரஸ் ஆப்பிள் போல வந்து நிற்கும்போது வருகிறதே ஒரு சிரிப்பு, வடிவேலு காமெடியெல்லாம் பிச்சையெடுக்கனும்.
ம். காமெடின்னதும் ஞாபகத்துக்கு வருது. வில்லன் ஆட்களுடன் ஒரு பைட்டு, நாயகி ஸ்ரேயாவுடன் ஒரு பாட்டுன்னு விஷால் மோதிக்கொண்டிருக்க, இடையில் சந்தானம் - பறவை முனியம்மா காமெடி வயிற்றை பதம்பார்க்கிறது. எனி டைம் மப்பிலேயே அலையும் மயில்சாமியும் ரிலாக்ஸ்.
“விடுப்பா விடுப்பா பஞ்சாயத்துன்னா லைட்ட வைக்கிறதும் படத்தோட ஓபனிங்கல ஃபைட்ட வைக்கிறதும் சகஜம்தானே” என காது குடைந்தபடி கமெண்ட் அடிக்கும் பெரிய கருப்பதேவரும் கைதட்டல் பெறுகிறார். பிரகாஷ்ராஜ்-கிஷோரின் எபிசோட் ’அக்னி நட்சத்திரம்’ காலத்தை சேர்ந்த பழமை.
விஷால் யாருன்னே தெரியாம லவ்வும் ஸ்ரேயாவின் கேரக்டரும் அவரைப்போலவே எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறது. ஒளிப்பதிவும் இசையும் ரசிக்க வைக்கிறது.
விஷாலின் ஒரே மாதிரியான ’தோரணை’ அலுக்கிறது!