போலீசுக்கு தண்ணிக்காட்டும் குற்றவாளிகளை பிடிக்க விஜயகாந்த் போன்றவர்களை தவிர பொருத்தமானவர்கள் இருக்கமுடியாது என்பதால் மீண்டும் கேப்டனை அதே வேடத்தில் பார்க்கமுடிகிறது. இம்முறை கொஞ்சம் ஸ்டைலிஷாக.
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மூளையாக இருக்கும் விஞ்ஞானிகள் சிலர் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி பிஜூமேனன் நியமிக்கப்படுகிறார். இதற்காக மும்பையிலிருந்து விமானத்தில் வரும் பிஜூமேனன் சென்னை வருவதற்குள் மாயமாகிறார்.
ஒரு கிலோ சப்பாத்தி மாவை கொடுத்தால் ரொட்டிப்போடும் பக்குவத்திற்கு தரும் அளவிற்கு கையை பிசைந்து கொண்டிருக்கிறது காவல்துறை. இதனால் கிரிமினாலஜிஸ்ட் விஜயகாந்திடம் கேஸை ஒப்படைக்கிறது. அடிப்படை விஷயங்களில் மோப்பம் பிடிக்க ஆரம்பிக்கும் விஜயகாந்த், கொலை பின்னணியின் ஆணிவேரை கண்டுபிடிப்பதே கதை.
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் சக்திகளை அழித்துவிட்டால் வல்லரசு ஆவதை தடுத்துவிடலாம் என சில நாடுகள் போடும் திட்டத்தை அம்பலப்படுத்தும் பின்னணி திடுக்கிட வைக்கிறது. கதையில் காட்டியிருக்கும் இந்த தேச அக்கறைக்காக இயக்குனர் மாதேஷை மனதார பாராட்டியே ஆகவேண்டும்.
நல்லவேளை கேப்டனுக்கு காக்கிசட்டையெல்லாம் போட்டுவிட்டு பக்கம் பக்கமாக வசனம் பேச வைக்காமல் ரமணா பாணியில் அவரை காட்டியிருப்பது சிறப்பு. தலைப்பை தவிர எந்த அரசியல் வாடையும் காட்சிகளில் இடம்பெறாதது சூப்பர்.
முகத்தில் போடப்பட்ட ஒப்பனை மட்டும் தூக்கலாக தெரிகிறதே தவிர கேப்டனின் நடிப்பில் இளவம்பஞ்சின் மென்மையும் இயல்பும் அவரது பக்குவத்தை வெளிப்படுத்துகிறது. எந்தவொரு இடத்திலும் தனது கட்சிக்கொள்கைகளோ, அரசியல் கருத்துகளையோ திணிக்காதது படத்தின் பலம்.
போலீஸ் அதிகாரி, சர்வதேச குற்றவாளி என இரட்டைவேடம் போட்டுள்ள பிஜூமேனன், நடிப்பிலும் டபுள் ஷாட்.
விஜயகாந்தின் மனைவியாக காதுகேளாத கதாபாத்திரத்தில் வரும் நவ்நீத் கவுர், கணவனின் லட்சியத்திற்காக தன்னை மாய்த்துக்கொள்ளும் காட்சி செண்டிமென்ட் குவியல்.
இன்டர்போல் போலீஸான ஷெரில் பிரிண்டோ, யூனிபார்மில் வருவதைவிட கிளாமர் உடையில் கவர்ச்சி விருந்து படைப்பதுதான் அதிகம்.
கதையின் போக்கு கனடாவிற்குள் நுழைந்ததுமே ஹாலிவுட் படம் பார்க்கும் திருப்தியை அளிக்கிறார் இயக்குனர் மாதேஷ். இதற்கு கைகொடுத்திருப்பவர் கேமிராமேன் ஏ.வெங்கடேஷ்.
சென்னைக்கு வரும் வழியிலேயே பிஜூமேனன் மாயமாகிவிட்ட பிறகு படத்தில் ஏற்படும் வேகமும் சஸ்பென்சும் திரைக்கதையை சுவாரஸியமாக்குகிறது. சுவிங்கத்திற்குள் மெமரிகார்டை மறைத்துவைக்கும் ஐடியாவும் பலே.
சமீபத்தில் வெளியான இன்னொரு படத்தைப்போலவே எங்கோவரும் டிரைனில் எங்கிருந்தோ பறந்து செல்வதுபோன்ற காட்சி டூமச்.
பின்னணியில் பிரமாதப்படுத்தியிருக்கும் ஸ்ரீகாந்த் தேவா, பாடல்களில் கவனம் செலுத்தாதது குறை.
'அரசாங்கம்' இயக்குனரின் ராஜ்ஜியம்.