கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் பார்த்து குதூகலிக்க வைக்கும் தீவு இந்த 'அற்புதத் தீவு.'
ஆண்கள் குள்ளர்களாகவும் பெண்கள் உயரமானவர்களாகவும் இருக்கும் ஒரு அதிசய தீவில் விமானப்படையை சேர்ந்த ப்ருத்திவிராஜும் அவரது சக நண்பர்களும் மாட்டிக்கொள்கிறார்கள்.
தங்களைவிட உயரமானவர்களை சாத்தானாக நினைக்கும் அந்த சாம்ராஜ்யத்திற்குள் காலடி வைக்கும் எவரையும் எமலோகம் அனுப்பும் குள்ளர்கள், ப்ருத்திவிராஜின் இரண்டு நண்பர்களை கொன்றுவிட குலைநடுங்கி போகிறார்கள் மற்றவர்கள்.
உயிருக்கு பயந்து ஒரு கோயிலுக்குள் மறைந்திருக்கும் ப்ருத்திவிராஜை குள்ளர்கள் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி மல்லிகா கபூர் பார்த்துவிட, தானும் தனது நண்பர்களும் சாதாரண மனிதர்கள்தான் என்றும் விமான விபத்தில் சிக்கி தீவில் மாட்டிக்கொண்ட உண்மையையும் சொல்ல, அவர்களை காப்பாற்ற உதவி செய்கிறார் மல்லிகா கபூர்.
ஜாதி, மதம், இனம், தேசத்திற்கு அப்பாற்பட்ட காதல் ப்ருத்திவிராஜ் - மல்லிகா இதயங்களிலும் ஆக்ரமிக்கிறது. ஒரு கட்டத்தில் ப்ருத்வியும் அவருடன் வந்தவர்களும் குள்ளர்களிடம் வசமாக மாட்டிக்கொள்ள, அவர்களின் உயிரும், ப்ருத்வி - மல்லிகாவின் காதலும் மீட்கப்படுகிறதா இல்லையா என்பதே கதை.
கணவர்களையும், காதலனையும் பெண்கள் கக்கத்தில் தூக்கிவைத்துக்கொண்டு வரும் தொடக்க காட்சிகளிலேயே கலகலப்பை ஆரம்பித்துவைக்கும் இயக்குனர், படம் முடியும்வரை பொழுதுபோக்கிற்கு சிறப்பான தீனி போட தவரவில்லை.
மாமன்னன் மணிவண்ணன் முதல் கடைக்கோடி சிப்பாய் வரை மூன்றடிக்கு கீழே உள்ள குள்ளர்களையும் அவர்களது குறும்புகளையும் பார்க்கும்போது அடுத்த ஷோவுக்கும் டிக்கெட் எடுக்க தோன்றுகிறது.
முழுஅடி ஸ்கேலில் முக்கால் அடிகூட தாண்டாத அளவுக்கு குள்ளமாக இருக்கும் பக்ரூ செய்யும் ஆக்ஷ்னிலும், காதல் சல்லாபங்களிலும் காணாமல் போகிறது நாயகன் ப்ருத்திவின் கேரக்டர். குதிரை ஓட்டிவருவது, இளவரசரின் சீற்றமும் செயல்பாடும் சிறிதும் குன்றாமல் வீரர்களுக்கு கட்டளைகளை பிறப்பிப்பது என இவரது நடிப்பில் உயிர்ப்பு. பக்ரூ தமிழ் சினிமா காமெடியர்களுக்கு 'திக்'ரூவாக திகழ்வார்.
குள்ளர்களிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குள்ளர்கள்போலவே உருவம் மாற்றிக்கொள்வதுதான் என்ற நிலையில் ப்ருத்திவியும் அவரது நண்பர்களும் மூளையை கசக்கிக்கொண்டிருக்க, நடிகர் கமலிடம் ஐடியா கேட்டா தருவாரா என ஒருவர் அடிக்கும் டைமிங் காமெடியில் தியேட்டரே சிரிப்பு தீவாகிப்போகிறது.
பின்னர், கால்களை பின்புறம் மடக்கிக்கட்டியவாறு ப்ருத்திவிராஜின் கோஷ்டிகள் செய்யும் சேட்டைகள் சார்லி சாப்ளின் படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்துகிறது.
இளவரசியாக வரும் மல்லிகா கபூர் ப்ருத்திவிராஜின் மேல் காதல் கொண்டு கற்பனையில் மிதக்கும்போது சொக்க வைக்கிறார்.
மாமன்னராக மணிவண்ணன். எதிர்த்துப்பேசும் ராணிகளை தனது உயரத்திற்கு கீழே குனியவைத்து அறைவது கல்யாணமாகாமல் இருக்கும் அரண்மனை சேவகி கல்பனாவிடம் ஜொள்விடுவது என ரசிக்க + சிரிக்க வைக்கிறார். பெண் வேஷம் போட்டு மாட்டிக்கொள்ளும் கருணாஸ், வையாபுரி, ஆ.... ஊ....என்றால் யாகம் வளர்க்க சொல்லி பணம் கறக்கும் குள்ளச் சாமியார் என மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்குக்கு கலகலப்பூட்டியுள்ளனர்.
குள்ளர்கள் தேசம் என்ற தனது கற்பனைக்கு விஸ்வரூப வடிவம் கொடுத்திருக்கும் வினயனின் இயக்கம், சிறுவர் முதல் பெரியோர் வரை மயக்கும்.
'அற்புதத் தீவு' ஹா.... ஹா....