பணத்துக்காக ஒரிஜினலின் இடத்தை டூப்ளிகேட் ஆக்ரமிக்கும் ஆள் மாறாட்ட கண்ணாமூச்சி ரே..ரே.. கதை. இதில் ஈஎஸ்பி பவர் என எக்ஸ்ட்ரா பில்டப்.
கிரவுண்டில் ஓடிக் கொண்டும் ஸ்ரேயாவுடன் டூயட் பாடிக் கொண்டும் ஜாலியாக இருக்கும் விஜய்க்கு எதிர்காலத்தில் நடக்கப் போவதெல்லாம் தெரிய வருகிறது. தனது காதலியை தானே கொலை செய்ய முயல்வது ஈஎஸ்பி சக்தி மூலம் அவருக்கு தெரியவர, காதலியை விட்டு மும்பை செல்கிறார். இந்த இடைவெளியில் பணத்துக்காக எதுவும் செய்யும் இன்னொரு விஜய் ஒரிஜினிலின் இடத்தை ஆக்ரமிக்க, ஆடுபுலி ஆட்டம் சூடு பிடிக்கிறது.
ஈஎஸ்பி பவர், எதிர்காலத்தை முன் கூட்டியே அறியும் சக்தி என பில்டப் கொடுக்கும்போது, ஏதோ வித்தியாசமாக காட்டப் போகிறார்கள் என நிமிர்ந்து உட்கார்ந்தால், அதை அப்படியே ஓரங்கட்டி ஆள்மாறாட்டம் என்ற கட்டை வண்டியில் ஏறிக் கொள்கிறது படம். அதனை ஒத்தை ஆளாக (துணைக்கு ஏ.ஆர்.) சமாளித்து ஓட்டுகிறார் விஜய்.
பிரசாத் எனும் டோண்ட்கேர் வேடத்தில் டயலாக்கை பபிள்கம்மாக இஷ்டத்துக்கு வளைத்து அவர் துப்பும் ஸ்டைல் அட போட வைக்கிறது. பாடல்காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் அவர் சொன்னபடி கேட்கிறது உடம்பு. ஸ்ரேயாவுக்கு கவர்ச்சி காட்டவும், நடிப்பை காட்டவும் நிறைய வாய்ப்புகள். முன்னதில் டிஸ்டிங்ஷன் வாங்குகிறார். பின்னதில் ஜஸ்ட் பாஸ்!
சந்தானம், சத்யன், எம்.எஸ். பாஸ்கர், கஞ்சா கருப்பு என காமெடி பட்டாளமே உண்டு. எத்தனைபேர் என எண்ணி முடிப்பதற்குள் காணாமல்போய் விடுகிறார்கள். குறிப்பிட்டு சொல்லும்படியான நடிப்பு கீதாவினுடையது. ஷாயாஜி ஷிண்டேயையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
படத்துக்கு பெரிய பிளஸ் ஏ.ஆர். ரஹ்மானின் இசை. படத்தில் இங்கிலீஷ் மீடிய தமிழாக சிலநேரம் இசை பயன்படுத்தப்பட்டாலும், காதுக்கு இனிமை. 'எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே....', 'மதுரைக்கு போகாதடி...', 'வலையப்பட்டி தவிலே...' பாடல்கள் டாப் 10-ஐ கைவசப்படுத்தக் கூடியவை. பாடல் காட்சிகளை ஆண்டனியின் எடிட்டிங் சுவாரஸியப்படுத்த முயல்கின்றன.
பெப்ஸி விஜயனின் ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு பெரிதும் கை கொடுக்கிறது பாலசுப்பிரமணியெம்மின் கேமரா. சிறுமி இறந்து கிடப்பதை விஜய் பார்க்க வரும் காட்சியில் கண நேரத்தில் கேமரா புரியும் ஜாலம் ஒளிப்பதிவாளர் யார் என கேட்க வைக்கிறது.
சிக்கலான கதையை சிக்கலில்லாமல் சொன்ன பரதனுக்கு சபாஷ். வசனகர்த்தா என்பதால் பரதனின் சின்ன வார்த்தைகளிலும் சுதி தெரிகிறது. திரைக்கதையின் லாஜிக் மீறல்கள் லாரி தேறும்.
அழகிய தமிழ்மகன்தான் - ஆனால் எழுத்துப் பிழைகள் மிகுந்த தமிழ்மகன்!