கோயம்புத்தூருக்கும் கோபிசெட்டிபாளையத்துக்கும் தினமும் டிராவல் பண்ணினாலே அழுத்துவிடும் இந்க காலத்தில் இரவில் இந்திரலோகத்திலும் பகலில் பூமியிலும் மாறி மாறி வாழ்க்கை நடத்தினால் எப்படியிருக்கும்? என்ற தனது கற்பனைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
நாடக கலைஞரான வடிவேலுவுக்கு திருமண பந்தத்தில் தோஷம் இருப்பதாக கூறுகிறார் ஜோதிடர். அதற்கு பரிகாரமாக பெண்ணின் கற்சிலைக்கு மாலை அணிவித்து மணக்க வேண்டும் என்கிறார். அதன்படி வடிவேலு செய்ய, கற்சிலை உயிராகிறது. அதுதான் ரம்பை. ஒரு சாபத்தால் கற்சிலையாக மாறிய தனக்கு சாபவிமோசனம் கொடுத்த வடிவேலுவை இந்திரலோகத்திற்கு கடத்துகிறார் ரம்பை.
பகலில் பூமியிலும் இரவில் இந்திரலோகத்திலும் விசிட் அடிக்கும் வடிவேலு அங்கிருக்கும் ரகசிய அறைக்குள் சென்று முக்காலம் பற்றியும் தெரிந்துகொள்கிறார். இதனால் இந்திரனின் கோபத்திற்கு ஆளாகும் வடிவேலு 90 வயது கிழவனாக மாற சபிக்கப்படுகிறார். அவரை இந்திரலோகத்திற்கு அழைத்துவந்த ரம்பைக்கும் ஆவியாக அலையும்படி சாபம் கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கான சாப விமோசனம் எப்படி கிடைக்கிறது என்பது கிளைமாக்ஸ்.
நம்பமுடியாத கற்பனை, முப்பது வருடங்களுக்கு முந்திய பல புராண படங்களின் சாயல் போன்ற குறைகளையெல்லாம் சகித்துக்கொண்டு எங்காவது சுவாரஸ்யம் ஏற்படுத்துவார் இயக்குனர் என்ற நமது எதிர்பார்ப்பை எண்ணெய் கொப்பரையில் தள்ளி வதைத்தெடுக்கிறார் தம்பிராமையா.
எம்.ஜி.ஆர் ஸ்டைல் டான்ஸ், வசனம் என சில இடங்களில் மட்டுமே ரசிக்கவைக்கும் வடிவேலுவிடம் வழக்கமான கலகலப்பை கண்டிபிடிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கலாம். நாடக கலைஞன், எமன், இந்திரன் என மூன்று கதாபாத்திரமும் ஏற்றிருக்கும் வடிவேலு மூன்று மணி நேரமும் பேசியே கொல்கிறார்.
ஏதோ பக்கத்து கேபினுக்கு போவது மாதிரி எமலோகத்திற்கும் இந்திரலோகத்திற்கும் மாறி மாறி பயணிப்பது, எமனையே கொல்ல சித்திரகுள்ளர்களுக்கு பட்டைசாராயம் கொடுத்து ஏமாற்றுவது என நம்மையும் ஏமாற்றுகிறார் இயக்குனர்.
பிரமாண்டமான செட் மட்டும் படத்தில் இல்லாவிட்டால் முச்சந்தியில் வள்ளித்திருமணம் நாடகம் பார்ப்பதுபோலதான் இருந்திருக்கும். ரம்பையாக நடித்திருக்கும் புதுமுகம், நாட்டியத்தை தவிர முகத்தில் எந்த ரியாக்ஷ்ணையும் காட்டவில்லை. நாசருக்கு நாரதர் வேடம். நாராயணா....
துணுக்கு தோரணங்களாக படத்தை தொங்கவிடும் இயக்குனர், அந்தகால விட்டலாச்சாரியார் படத்தை பார்த்தால் நிச்சயம் வெட்கப்படுவார். வடிவேலு, இயக்குனர் இருவரில் ஒருவராவது ஜெயித்திருந்தால் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஜொலித்திருப்பார்.
வடிவேலு பாணியில் சொல்வது என்றால் ஹய்யோ... ஹய்யோ.