ஜீவா என்ற பெயரை கேட்டாலே அரசியல்வாதியில் ஆரம்பித்து போலீஸ் வரை அனைவருமே தொடைநடுங்கி போகிறார்கள். யார் இந்த ஜீவா என்று புருவம் தூக்கும்போது அறிமுகமாகிறார் நாயகன் சிம்பு. இவர்தான் ஜீவா.
தேனியில் கிராமத்து காளையாக வலம் வந்த சிம்பு அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் லாலை போட்டுத்தள்ள சென்னையில் ரவுண்ட் அடிக்கிறார். இதற்கான காரணம் என்ன என்பதற்கு ப்ளாஷ்பேக் மேல் ப்ளஷ் பேக் விரிய நீண்ட..... இழுவைக்கு பிறகு முடிகிறது படம்.
நாயகன், வில்லன், லோக்கல் ரவுடி இந்த மூன்று கதாபாத்திரத்தின் பெயருமே ஜீவாதான். கடைசி இருவரில் நாயகன் யாரை கொல்ல வந்தார் என்று டுவிஸ்ட் வைக்கும ஆரம்பகாட்சிகள் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் ஆ....'ரம்ப' காட்சிகளாய் அரட்டுகிறது.
மீண்டும் தனது விரல் வித்தையை காட்ட ஆரம்பித்துள்ளார் சிம்பு. நடனம், சண்டை தவிர நடிப்பில் பாராட்டும்படியான அம்சங்கள் எதுவும் தென்படவில்லை.
தனது அப்பாவை (லால்) பிடிக்க தன்னை பகடை காயாக பயன்படுத்துவது தெரியாமல் சிம்புவுடன் டூயட் பாடுவதை தவிர வேதிகாவுக்கு வேறு வாய்ப்பில்லை.
சிம்புவின் பாட்டியாக சீமா, அத்தையாக சங்கீதா, பதவி ஆசை பிடித்தவராக லால் ஆகியோரின் நடிப்புக்கு பாஸ்மார்க் போடலாம். காமெடி என்ற பெயரில் கடிக்கிறார் சந்தானம். நண்பர்களுடன் 'தண்ணி'யடிக்க காத்திருக்கும் ஒரு சீன் மட்டும் கலகலப்பு.
இசை ஜீ.வி.பிரகாஷ்குமாராம். தியேட்டரை விட்டு வெளியே வந்தபிறகு எந்த பாடலும் ஞாபகத்திற்கு வரவில்லை.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் 'திமிரு' தருண்கோபி. 'வாவ்' போட வைப்பார் என்று நினைத்தால் 'ஆவ்....' போட வைத்துள்ளார்.
'காளை' முட்டுகிறது.