தமிழ் சினிமாவில் கணக்கில்லாத ஆவி கதைகளை பார்த்து பார்த்து சலித்துவிட்டாலும் அவைகளின் சாயல் இல்லாத ஆவி பறக்கும் காதல் கதையாக வந்திருக்கும் இந்த படத்திற்கு பாஸ் மார்க் தரலாம்.
விளையாட்டு, படிப்பு, தேர்தல் எல்லாவற்றிலும் எதிரும் புதிருமாக இருக்கும் கல்லூரி மாணவர்கள் பரதன் மற்றும் ரவி. பரதனின் செயல்பாடுகளிலும் பேச்சிலும் கரடுமுரடு இருந்தும் கள்ளம்கபடம் இல்லாதவர். ரவியோ தனது ஒவ்வொரு செயலிலும் நிதானத்தை காட்டி வெற்றி கனியை பறிக்கும் விவேகத்திற்கு சொந்தக்காரர்.
இப்படி கிழக்கும் மேற்குமாக இருக்கும் இருவரிடமும் நட்பாக பழகுகிறார் சக மாணவி மேக்னா. ஒரு கட்டத்தில் மேக்னா மீது இருவருக்குமே காதல் ஏற்படுகிறது. பரதன் தனது அவசர புத்தியால் மேக்னா மீது காதல் புள்ளி மட்டுமே வைக்கமுடிகிறது. கெட்டிகாரரான ரவியோ தனது சாதுர்யத்தால் பரதன் வைத்த புள்ளியில் கோலமே போடுகிறார். மேக்னா யாருக்கு? பட்டிமன்றம் நடக்கையில் ரவிக்குதான் தன் மனதில் இடமென்று மேக்னா சொல்ல, அந்த பதில் பரதனின் காதலில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவதுடன் இடைவேளை முடிய, வித்தியாசமான க்ளைமேக்ஸுடன் முடிகிறது படம்.
பரதன் - ரவி - மேக்னா மூவரும் புதுமுகங்கள்தான் என்றாலும் நடிப்பில் முடிந்த அளவு முதிர்ச்சியை காட்ட முயற்சித்துள்ளதை பாராட்டலாம். ரவியின் நண்பராக வரும் கருணாஸ் போரடிக்கும் இடங்களில் காமெடியில் கைகொடுத்து உதவுகிறார்.
இடைவேளைவரை திரைக்கதையில் 'ஜவ்வு' போடும் இயக்குனர் மீது சலிப்பு ஏற்பட்டாலும் இரண்டாம் பாதியில் வித்தியாசத்தையும் வேகத்தையும் கூட்டி வியப்பூட்டுகிறார்.
சாலை விபத்துக்கு பிறகு மேக்னாவை சந்திக்க ரவி முயற்சிப்பதும் மேக்னா கண்டுகொள்ளாமல் போகும்போது ஏன் என்று குழப்பும் காட்சியில் அது ரவியின் 'ஆவி' என்பது தெரியவரும்போது படம் பார்ப்பவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர். க்ளைமாக்ஸிலும் வித்தியாசத்தின் உச்சம்.
பரதன் வரைந்த மேக்னாவின் ஓவியம் மழையில் நனையாமல் ரவி குடைப்பிடிக்கும் காட்சியில் இயக்குனரின் புத்திசாலித்தனத்தில் ரசனை மழை.
முதல்பாதி படத்தின் இழுவைகளையும், அநாவசியமாக மூக்கை நுழைத்து எரிச்சலூட்டும் பாடல்களையும் தவிர்த்திருந்தால் 'நீ.. நான்.. நிலா..' கூடுதலாக ஜொலித்திருக்கும்.