கெட்டிமேளம் கொட்டும் தருவாயில் காலாவதியாகும் ஒரு கல்யாணத்தில் புதுக்காதல் பூத்தால் எப்படியிருக்கும்...? 'நினைத்தாலே இனிக்கிறது' என்பவர்கள் தொடர்ந்து சுவைத்திடுங்கள் விமர்சனத்தில்!
சின்ன வயதிலேயே சாலை விபத்தொன்றில் குடும்பத்தையே இழந்து தனியாளாக வளர்ந்து ஆளாகும் நாயகி நர்கீசுக்கு உடன் பணிபுரியும் சர்ப்ராசுடன் காதலாகிறது. கல்யாணத்திற்கு நாள் குறித்து முகூர்த்தம் நெருங்கும் வேளையில் சர்ப்ராசின் அம்மா நர்கீஸிடம் தனது பணக்கார ஆணவத்தையும் அடிமை குணத்தையும் வெளிப்படுத்த, மாலை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று மனசை மாற்றிக்கொள்கிறார் நர்கீஸ்.
நர்கீஸன் இந்த முடிவும் அவரது செயல்பாடுகளும் அதே திருமணத்திற்கு வரும் சுசினை ஈர்த்துவிட, அந்த நொடியிலேயே நர்கீஸை காதலிக்க தொடங்குகிறார் சுசின். நாயகனின் மீதும் நர்கீஸ்க்கு காதல் மலரும் நேரத்தில் விபத்தில் தனது பெற்றோர் இறப்பதற்கு காரணமே சுசினின் தந்தைதான் என்பது நாயகிக்கு தெரியவர, நர்கீஸின் இரண்டாவது காதலிலும் இடி விழுகிறது. சுசின் - நர்கீசின் வாழ்க்கையில் சுபவேளை வருகிறதா இல்லை? என்பது மீதி கதை.
ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத நாயகன் நாயகியாக இருந்தாலும் கதையும் அதன் போக்கும் படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அவர்களை இதயத்தில் நெருங்கவைத்து விடுகிறது. எந்தவொரு முடிவிலும் ஒரு தொடக்கம் உண்டு என்ற தத்துவம் கதையின் முடிச்சுக்களில் இழையோடுவது திரைக்கதையை தித்திக்க வைக்கிறது.
'கண்ணோட காண்பதெல்லாம்' படத்திற்கு பிறகு சுசின் நடித்துள்ள படம். காதலியின் காம்பவுண்டுக்குள் குடிபுகுந்து பின்பு அவளின் மனசில் குடிபுகும் ரொமான்ஸ், கிருஷ்ணாவுடன் இணைந்து அடிக்கும் காமெடி லூட்டி என தனது டியூட்டியை திறம்பட செய்துள்ளார் சுசின். அட முதல் படத்திற்கும் இதற்கும் இடையே நடிப்பில் நிறைய மாற்றங்கள் இருக்கிறதே இது சுசின்தானா என்னும் ஆச்சரியத்தில் கிள்ளிப்பார்த்தால், 'கண்ணோட காண்பதெல்லாம்' நிஜமே.
புதுமைப்பெண்களில் ஒருவராக புதுமுகம் நர்கீஸின் கதாபாத்திரம். அடுத்தடுத்து வரும் சோதனைகளில் உடைந்துபோய் உருகுவது, சிக்கனம் கருதி எல்லா பொருட்களையும் பேரம்பேசுவது, இரண்டாவதாக பூக்கும் காதலால் சந்தோஷத்தில் சிறகடிப்பது, எப்போதோ ஒருமுறை சுசின் தனது பின்னழகை ரசித்தது ஞாபகத்திற்குவர, அலங்காரம் முடித்துவிட்டு திரும்பும்நொடியில் கண்ணாடியில் பின்புறம் பார்த்துவிட்டு செல்வது என நர்கீஸ் நடிப்பில் புஸ்டியாக இருக்கிறார்.
நாயகன், நாயகி மட்டுமே இருந்தால் அலுப்பூட்டலாகிவிடும். அதை தவிர்ப்பதற்கு கிருஷ்ணா, சந்தோஷின, குட்டீஸ்கள் என சுவாரஸ்ய குவியல்களும் உண்டு.
'பேருதான் ரூபா ஆனா சில்லறையா இருக்காளே...', 'ஏய் நீ நிறைய சினிமா பார்ப்பிய இது அந்த சீனு கிடையாது...' போன்ற பரதனின் வசனங்கள் கதைக்கு சதைப்யூட்டுகிறது. மதியின் ஒளிப்பதிவும் தெளிவான பிரதிபலிப்பு. விஜய் ஆண்டனியின் கைவண்ணத்தில் 'நாந்தானா நாந்தானா...' பாடல் மெலடி ரீங்காரம்.
வி.என். சுந்தரின் திரைக்கதை இயக்கத்தில் 'நினைத்தாலே' இனிக்கிறது.