"தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு..."
கண்ணதாசனின் இந்த ஒற்றை வரியை வாழ்ந்து பார்த்து வலியுணர்ந்த ஒருவனின் கதையை நாவலாக்கி கண்ணீர் சுரக்க வைத்தவர் தங்கர்பச்சான். அதனை காட்சிகளாக்கி மீண்டும் மனசை கனக்க செய்திருக்கிறார்.
மாதவ படையாச்சி - வேலாயி. பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டை கிராமத்தில் வாழும் தம்பதியர். மண்ணின் ஈரத்துடன் ஒப்பிடும் மனசுக்கு சொந்தக்காரர்கள். ஊரார் யாருக்காவது ஒன்றென்றால் போதும். உழைத்து சேமித்த பணம் இவர்களுக்கு காகிதமாகி கைமாறிப்போகும்.
காலம் நரைதட்ட நரைதட்ட பிள்ளைகள், பேரன், பேத்திகள் என மாதபவ படையாச்சியின் மனசு போலவே விரிவாகிறது குடும்பம். ஏதேன் தோட்டமாக இருக்கும் இவர்களது வாழ்க்கையில் சாத்தானாக நுழைகிறார் பக்கத்துவீட்டுக்காரர். மாதவர் மகன்களின் மனசை கெடுக்கும் தண்டபானி, நல்வார்த்தை என்னும் பெயரில் குடும்பத்தை நாசமாக்க திட்டம்போடுகிறார்.
அப்பா சம்பாதித்த சொத்துக்கள் மேல் மகன்- மருமகள்களின் கவனம் செல்ல, மனைவி வேலாயியுடன் போபித்துக்கொண்டு வீட்டைவிட்டே வெளியேறுகிறார் மாதவர்.
எப்போதோ தான் உதவி செய்த இஸ்லாமிய நண்பரை தேடி ஆம்பூர் செல்கிறார்கள் இருவரும். அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆட்டுக்கிடை போட்டு ஒண்டிக்குடித்தனம் நடத்த ஆரம்பிக்க ஆறு வருடங்கள் உருண்டோடுகிறது. பிள்ளைகளைப் பார்க்கும் ஆசை மனசுக்குள் எட்டிப்பார்க்க பத்திரக்கோட்டை செல்ல முடிவெடுக்கின்றனர்.
தனது சோகத்திற்கெல்லாம் முடிவு கிடைக்கபோகிறதே என்று நினைக்கும் மாதவரின் ஆசையில் மண் அள்ளிப்போடுகிறது விதி. பாவம் மனைவி வேலாயியின் உயிரை பாம்பு பறிக்க சிலையாகிப்போகிறார் செய்வதறியாது.
அடுத்து என்ன? ப்ளீஸ் அழுது முடிக்கும் நேரத்தில் படம் பார்த்துட்டு வாங்க மீதி கண்ணீரை சேர்ந்து கரைப்போம்.
இது படம் என்ற நிஜமெல்லாம் மறந்துபோகும் அளவிற்கு கதை சொல்லும் விதத்தில், காட்சியமைப்புகளில் பத்திரக்கோட்டை நோக்கி படம் பார்ப்பவர்களை பயணபடுத்துவதிலேயே தங்கர்பச்சானின் கலப்படமில்லாத உழைப்பை உச்சி முகர்ந்து பாராட்டத் தோன்றுகிறது.
தங்கரின் கதை, வெறுங்காகிதமென்று வைத்துக்கொண்டால், அதனை எழுத்துக்களாக நிரப்பும் பாத்திரங்களாக படத்தில் பங்கேற்கும் அத்தனை கலைஞர்களும் இயக்குனரின் எண்ணத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.
நடிப்புக்காக எத்தனை விருதுகள் இருக்கின்றதோ அத்தனை விருதுகளையும் சத்தியராஜ் தன் வசப்படுத்திக்கொள்வது மட்டும் சத்தியமான வார்த்தை.
நடுத்தர வயது மனிதன், முதியோர் என பருவத்தின் மாற்றங்களுக்கேற்ப பாவங்களை மாற்றிக்கொண்டு மாதவ படையாச்சியை கண்முன் நிறுத்தும் சத்யராஜ் முதன்முறையாக முழுமையான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் இயக்குனர்களே சத்யராஜின் கேரக்டரை இனியாவது புரிந்துகொண்டு அவருக்கான தீனி போடுங்கள்.
பிள்ளைகளை பார்க்கவேண்டும் என்ற ஆசையை மனசுக்குள் பூட்டிவைத்து வைராக்கியமாக இருக்கும் சத்யராஜ், ஒருநாள் தூக்கத்தில் புலம்பி வெளிப்படுத்துவது, மனைவி இறந்ததும் மனமிடிந்து அழுவது, ஊருக்குள் திரும்பும்போது மண்ணில் விழுந்து முத்தமிடுவது, பசியால் பேரப்பிள்ளை அழுவதைப் பார்த்து தலையிலடித்துக் கொள்வது என பல காட்சிகளில் உருக்கி எடுக்கிறார்.
வேலாயி கதாபாத்திரத்தில் அர்ச்சனாவின் நடிப்புக்கு இன்னொரு தேசிய விருது நிச்சயமென்றே சொல்லலாம். மகனின் காதல் விவகாரம் தெரிந்து அவனை உலுக்கி எடுக்கும் இடத்தில் மிரட்டியிருக்கிறார்.
காஜா பாயாக நாசர், கமீலாவாக ரோகினி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் மனசை பிழிந்தெடுக்கின்றனர்.
பல வருடங்கள் கழித்து ஊருக்குள் செல்லும்போது அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் செயற்கைத்தனமின்றி இயல்பாக படம்பிடிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
தங்கர்பச்சான் போதாதென்று, பரத்வாஜ் இசையில் வைரமுத்து எழுதிய 'மார்கழியில் குளிச்சி பாரு', 'யார் யாரோ...' பாடல்களும் கண்ணீர்விடவைக்கின்றன. சத்யராஜ் ஊருக்குள் நுழையும்போது இசைச்சேர்ப்பு இல்லாமல் அமைதியாக விட்டுவிடும் இடத்தில் மட்டுமே பரத்வாஜ் பின்னணி இசையை சரியாக செய்துள்ளார். மற்ற இடங்களில் பொருத்தமில்லாத சப்தங்களே
சத்யராஜிடம் உதவி பெறும் நாசர், பணக்காரர் ஆனபிறகு சத்யராஜை தேடி வராதது ஏன்? என்ற கேள்வி எழும்பும் இடத்தில் திரைக்கதையில் கவனம் சிதறியிருக்கிறார் இயக்குனர். மற்றபடி மனசை நெகிழவைக்கும் தங்கருக்கு மேடைபோட்டு பாராட்டலாம்.
'ஒன்பது ரூபாய் நோட்டு' செல்லும்.