பெரியாரின் பத்தொன்பது வயது முதல் அவர் இறக்கும்வரை ஏறக்குறைய எழுபது வருட வாழ்க்கையை சித்தரிக்கிறது படம். இரண்டரை மணிநேரத்தில் எழுபது வருட வாழ்க்கை... ஈ தலையில் இமயமலை மாதிரி!
இயக்குனர் ஞானராஜசேகரன் இந்த குறுகிய மணித்துளியில் பெரியாரின் அனைத்து ஆளுமையையும் திரையில் கொண்டு வர பாடுபட்டிருப்பது தெரிகிறது. கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு , பெண்ணடிமை ஒழிப்பு என பெரியாரின் அத்தனை குணாம்சங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலம் கோர்த்திருப்பது ஒருபுறம் அழகு என்றாலும் அதுவே துணுக்கு தோரணமாக சலிப்பூட்டுகிறது. திரைக்கதையை ஒரே லீனியராக அமைத்ததால் வந்த பிரச்சனை இது.
படத்தின் பிரதான அம்சம் சத்யராஜ். இதுவரை பார்க்காத புதுநடிப்பு. ஒவ்வொரு அசைவிலும் பெரியாராக ஒன்றி விட அவர் காட்டும் எத்தனிப்புக்கு ஒரு சபாஷ்! நாகம்மையாக வரும் ஜோதிர்மயி, மணியம்மையாக வரும் குஷ்பு, அண்ணாவாக வரும் எஸ்.எஸ். ஸ்டேன்லி ஆகியோர் கேரக்டருடன் கச்சிதமாக பொருந்துகிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஜே.கே யின் கலை. பழைய காலகட்டத்தை கண்முன் கொண்டுவரும் வீடுகளும், சில தெருக்களும், பின்னணியில் வரும் பழங்கால பொருட்களும் படத்துடன் ஒன்ற துணைபுரிகிறது. படத்தில் வரும் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.
நம்மோடு வாழ்ந்த மிகப் பெரிய தலைவரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியது என்ற வகையில் 'பெரியார்' படம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அதேநேரம் படத்தில் சில குறைகளும் உண்டு.
பெரியாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை தொகுத்திருக்கிறார்களே தவிர, அவரது ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்த தவறியிருக்கிறார்கள். உதாரணமாக, இளம் வயதில் சைவமான தனது குடும்பத்தினரின் சாப்பாட்டில் அசைவ உணவை வேண்டுமென்றே பெரியார் வைப்பதாக படத்தில் காட்சியொன்று இடம் பெறுகிறது. அதே பெரியார், வயது கனிந்த பிறகு, ஆன்மிகவாதிகளான தனது நண்பர்களை மதித்து அவர்கள் தனது வீட்டிற்குவரும் தினங்களில் அசைவத்தை தவிர்த்து வந்தார். இளமையில் காட்டாறாக இருந்து பின் அமைதியான நதியாக பரிணமித்த இதுபோன்ற தன்மைகளோ, அந்த மாற்றமோ படத்தில் வெளிப்படவில்லை.
வாழ்ந்து மறைந்த நமக்கு பரிட்சயமான வரலாற்று நாயகர்களை குறித்து படம் எடுக்கையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அறிமுகமில்லாதவர்களை தேர்ந்தெடுப்பதே சரியானது. சத்யராஜ், ஜோதிர்மயி, குஷ்பு ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவர்களை சத்யராஜாகவும், குஷ்புவாகவுமே உணர முடிவது படத்தின் பெரும் குறை.
ரகசியாவின் நடனமும், காசி செல்லும்போது வரும் கதாகலேட்சப பாணி பாடலும் தேவையில்லாதது. பாடல்கள் கேட்கும்படி இருந்தும் கதைக்கும் காட்சிக்கும் ஒட்டவில்லை.
இவையெல்லாம் குறைகளெனினும், பெரியார் போன்ற ஆளுமைகளை குறித்து இன்னும் இருபத்தைந்து படங்கள் எடுக்கலாம் என்ற வகையில், ஞானராஜசேகரனின் 'பெரியார்' படத்தை அதன் தொடக்கப் புள்ளியாக கருதி முழுமனத்துடன் வரவேற்கலாம்!