எந்தவித ஆச்சரியமும் தராத இன்னொரு காதல் கதை.
நாயகனுக்கும் நாயகிக்கும் சாலை விபத்தொன்றில் காதல் மலர்கிறது. எப்போதுமே காதலுக்கு வில்லன் அப்பாதான். இதிலும் நாயகியின் அப்பாவுக்கு மகளின் காதல் தெரியவர, வேறு ஊருக்கு குடும்பத்துடன் செல்கிறார். பிறகு காதலனின் தேடல், கொஞ்சம் ஊடல் என்று ஓரளவு ஊகிக்கக்கூடிய பின்பகுதி.
படத்தின் மிகப் பெரிய பிளஸ் என்றால் அது கதையின் பேக்ட்ராப். நாயகன் படத்தில் லாரி புக்கிங் ஆபிஸ் நடத்துகிறான். தனது காதலி புனேயில் இருப்பதும் ஒரு லாரி டிரைவரின் மூலமாகவே தெரியவருகிறது. லாரி, லாரி டிரைவர்கள் என தமிழ் சினிமா அதிகம் புழங்காத கதைக் களத்தில் படம் பயணிக்கிறது.
சின்ன விபத்தொன்றில் பிறக்கும் காதல் நம்பும்படியாக இல்லை. காதலியை நாயகன் புனேயில் தேடிச் செல்லும்போது, உடன் நாமும் சேர்ந்து தேடலாமா என்று தோன்றுகிறது. அந்தளவுக்கு நீளமான சலிப்பான காட்சிகள்.
நாயகன் அசோக்குமாரைவிட நாயகி விசாகா நடிப்பில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் விசாகாவின் நடிப்பு கைதட்டல் பெறுகிறது.
நண்பனுடன் ஒட்டிக் கொண்டே அவனது காதலியை தேடும் கஞ்சா கருப்பு அடிக்கடி சிரிக்க வைக்கிறார். சிலநேரம் சென்டிமெண்டில் அழ வைக்கவும் முயற்சி செய்கிறார்.
சிறுவன் குருஷி, சீக்கிய டிரைவர் போன்ற சின்னச் சின்ன கேரக்டரை செதுக்கியது போல், திரைக்கதையையும் கொஞ்சம் செப்பனிட்டிருந்தால் இயக்குனர் கனகுவை பாராட்டியிருக்கலாம்.
மனுரமேசனின் இசை படத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை. உபத்திரமாகவும் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். த.வீ.இராமேஸ்வரனின் ஒளிப்பதிவு படத்துக்கு உயிரூட்டுகிறது.
கொச்சையான வசனம், குத்துப்பாட்டு, ரத்தம் தெறிக்கும் வெட்டுக்குத்து இல்லாததற்கு கனகுவுக்கு கைகொடுக்கலாம். ஆனாலும், வழக்கமான கதையும், பழக்கமான காட்சிகளும் படத்தை பிடிச்சிருக்கு என்று சொல்ல வைக்க மறுக்கின்றன.