நம்மமுடியாத கதையை தனுஷ் தொடர்ந்து ஏன் நம்பிக் கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை.
தெருவிளக்கு வெளிச்சத்தில் மஞ்சள் பூசிய நட்டநடு ராத்திரி. சதக் சதக் என்று கத்திகள் பாய, குபுக்கென்று கொட்டுகிறது இரத்தம். காமிரா கோணத்தில் சந்து பொந்தெல்லாம் கண்களுக்குள் கபடிஆட, பத்துக்கு பத்து அறையில் பரலோகம் போய் கிடக்கின்ற இரண்டு பரட்டை தலைகள்.
குத்தியது யார் என்று குழப்பமே வேண்டாம். சாட்சாத் நம்ம ஹீரோ தனுஷ்தான். வெட்டுப்பட்ட காலுடன் விந்தி விந்தி நடப்பவர், ஒரு பல்சர் பைக் முன் வந்து நின்று 'இது எல்லாத்துக்கும் காரணம் இந்த பைக்தாங்க' என கதையின் ஆக்ஸிலேட்டரை முறுக்க ஆரம்பிக்கிறார்.
வெட்டியாக ஊர்ச்சுற்றும் தனுஷ் வேலைக்கு போவதற்காக ஒரு பைக் வாங்குகிறார். பைக் வ்நத ராசி வேலையும் கிடைக்கிறது. டூயட் பாட ஒரு ஜோடியும் (திவ்யா) கிடைக்கிறது. காதலியை காட்டிலும் தனுஷ் அதிகமாக 'லவ்வும்' அந்த பைக் திருட்டுபோக, கதையில் ஆரம்பிக்கிறது திருப்பம்.
வில்லனின் தம்பி டேனியல் பாலாஜிதான் பைக் திருடியவன் என்று தெரியவருகிறது. தட்டிக்கேட்கபோகும் இடத்தில் கைகலப்பு ஏற்பட அதுவே கலவரமாக மாறுகிறது. மீதி கதையை சொல்ல தனுஷ் உயிரோடு இருக்கிறாரா இல்லை என்பது க்ளைமாக்ஸ்.
திவ்யாவை காதலிக்கும் விஷயத்தை கேட்க சொல்லி நண்பர்களை நச்சரிப்பது, அப்பா முரளி அடிக்கும்போதுகூட அப்பாவித்தனமாக சிரிப்பது என காமெடி டிராக்கில் சூப்பர் சவாரி செய்யும் தனுஷ் பிரமாதம்.
கையில் கத்தி பிடிக்க ஆரம்பித்தவுடன் வில்லன் ஆட்களை சூரசம்ஹாரம் செய்து தனது ஆக்ஷ்ன் திறமையை வெளிப்டுத்துகிறார். எனினும் எலும்பும்தோலுமாக இருந்துகொண்டு இத்தனை பேரை காவு வாங்குவதுதான் காமெடியாக தெரிகிறது.
தன் தோற்றத்திற்கு ஒத்துவராத கேரக்டரை தனுஷ் தாங்கிப்பிடிப்பது இத்துடன் நான்காவது படம். ரூட்டை மாத்துங்க தனுஷ்.
தனுஷின் ஆக்ஷ்னை நம்ப மறுக்கும் நேரங்களில் அவருடன் டூயட் ஆட பயன்படுத்தப்பட்டிருக்கும் திவ்யாவின் கேரக்டர், தனுஷைபோல கனமின்றி இருக்கிறது.
புதிய வில்லன்களாக டேனியல் பாலாஜி, கிஷோர்குமார் ரவுடி கதாபாத்திரத்தில் பொருந்துகிறார்கள். சென்டிமெண்டுக்கு மலையாள முரளி, பானுப்ரியாவின் கேரக்டர்களும், காமெடிக்கு கருணாஸ் - சந்தானம் கூட்டணிகளும் பலம் சேர்க்கின்றனர்.
பாடல்களில் ஜீ.வி. பிரகாஷ் 'டல்.' பின்னணி பரவாயில்லை. 'எங்கேயும் எப்போதும்' ரீ-மிக்ஸ் பாடலில் ஆட்டம் போடலாம். ஆனால் இது ஜீ.வி. பிரகாஷின் கைவண்ணம் அல்ல.
ஆர். வேல்ராஜின் ஒளிப்பதிவில் கடின உழைப்பு தெரிகிறது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வெற்றிமாறன். புதிதாக எதாவது சொல்கிறாரா என்று கேட்டால் கொலையே விழும். 'பொல்லாதவன்' பெயர் பொருத்தம்.