சொந்தங்களால் மனநோயாளியாக சித்தரிக்கப்பட்டு விரட்டப்படும் ஆக்ரோஷ இளைஞன் வெகுண்டெழுந்தால் என்னவாகும் என்பதே போராளியின் கதை.
ஒரு படம் எவ்வளவு சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் ஏதோ ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி அல்லது ஒரு துளியாவது கண்டிப்பாக போர் அடிக்கும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு வாய்ப்பே இல்லை. படம் துவங்கியவுடன் சீட் நுனிக்கு வந்தால் படம் முடியும் வரை நம்மை அப்படியே உட்கார வைத்து விடுகிறார்கள்.
முந்தைய இரண்டு படங்கங்களை காட்டிலும் மூன்றாவது படத்தில் மூன்று மடங்கு விஸ்வரூபமெடுத்திருக்கிறார் சசிகுமார். இரண்டு குதிரையின் மேல் நின்றபடியே பயணிக்கும் முதல் தில், த்ரில் காட்சியிலிருந்து, அடுக்கு மாடி குடியிருப்பில் நடத்தும் நக்கல் நையாண்டி ரகளை, கிழவியிடம் வாங்கும் திட்டு, ஸ்வாதியுடன் மோதல் ஏற்பட்டு கலாய்ப்பது, சக தோழியின் குடும்ப நிலையை கண்டு சரி செய்வது, தொழிலில் சின்சியராக உழைப்பது, நண்பனுக்காக எதுவும் செய்வது என்று முதல் பாதி பட த்தில் பொறுப்புள்ள இளைஞனாக முகம் காட்டும் சசி, இடைவேளைக்குப் பிறகு எதிர்பாராத மனநோயாளி என்று முத்திரை ஃபளாஷ்பேக் கதைக்களத்துடன் ஆக்ரோஷ வெறி கொண்ட முரட்டு இளைஞனாக மாறுபட்ட நடிப்பில் தூள் பரத்துகிறார்.
'குறும்பு' படத்திற்கு பிறகு நரேஷ் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்திருக்கிறார். காதல் காமெடி செய்யும் குறும்புக்கார இளைஞன் வேடத்தில் நடிப்பில் மிளிர்ந்து தனி முத்திரை பதித்திருக்கிறார்.
'சுப்ரமணியபுரம்' படத்திற்கு பிறகு ஸ்வாதியை பார்க்க முடிகிறது. முட்டை கண்களுடன் சசிகுமாரை அவர் பார்க்கும் காதல் பார்வை வசீகரிக்கின்றன. 'கண்கள் இரண்டால்...' போல் ஒரு டூயட் பாடலாவது இருந்திருந்தால் சேனல்களில் அடிக்கடி போட்டு படத்திற்கு இலவச விளம்பரத்தைக் கொடுத்திருப்பார்கள். பிளாஷ்பேக்கில் சசிகுமாருக்கு உதவி செய்யும் கிராமத்துப் பெண்ணாக வசுந்தரா. குறைவாக வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். அதிலும் அவரைத் தாக்க வருபவர்களை தனியாக சமாளித்து இவர் மிரட்டும் தொனியே தனிதான்.
இடைவேளை வரை படத்தின் கலகலப்புக்கு பெரிதும் உதவியிருக்கிறார் கஞ்சா கருப்பு. ஆ..ஊ... என அலட்டல் இல்லாமல் இயல்பாகப் பேசி சிரிக்க வைக்கிறார். சசிகுமாரின் நண்பராக பரோட்டா சூரி, வீட்டுக்காரராக ஞானசம்பந்தம், டாக்டராக ஜெயபிரகாஷ், மற்றும் சசிகுமார் தங்கியிருக்கும் வீட்டின் காம்பவுண்டில் குடியிருக்கும் மற்ற கதாபாத்திரங்களையும் குறிப்பிட வேண்டும். அந்த காட்சிகள் அனைத்தும் மிகவும் யதார்த்தமாக அமைந்துள்ளன.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- சமுத்திரக்கனி. வெற்றிப் படத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்ற டெக்னிக் தெரிந்து புதுமையான கதைக்களத்துடன் களம் இறங்கியிருக்கிறார். மனநோயளிகளின் அவல வாழ்க்கையை சித்தரித்து, அவர்களின் பரிதாப நிலையை படம் பிடித்து, அதற்கு காரணம் சுற்றியிருக்கும் சொந்தங்களே என்று இடித்துரைத்திருக்கும் விதம் அருமை.
படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளது கதிரின் ஒளிப்பதிவு. படத்தின் முதல் பாதியை நகைச்சுவைகளாலும், எதார்த்தமான சம்பவங்களாலும் கதையை கோர்த்து தந்திருக்கும் சமுத்திரக்கனி, இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு, ஆக்ஷன் கலந்து அசத்தியிருக்கிறார்.
படத்தில் பாடல்கள் குறைவானாலும் பின்னணி இசையில் நம்மை படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு. குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதியில் அவரது இசை படத்தின் வேகத்திற்கு நம்மையும் ஒன்றவைக்கிறது.